பாஸ்டேக் மூலம் 'ரெக்கார்டு' வசூல் - ஒரே நாளில் ரூ.102 கோடியாம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பது, எரிபொருள் வீணாவது, சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை களையும் விதமாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது.
இதனை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் மூன்று முறை அவகாசம் வழங்கிய மத்திய அரசு, கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தபடும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
இதன்படி, சுங்கச்சாவடிகளில் பிப்.16 நள்ளிரவு முதல் வாகனங்களில் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்தது
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் முழுவதும் பாஸ்டேக் மூலம் சுங்கவரி வசூல் கடந்த நான்கு நாட்களில் 23% அதிகரித்துள்ளது, மேலும் இந்த தொகை வெள்ளிக்கிழமை ரூ .102 கோடியைத் தொட்டது, இது NHAI இன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் ஆகும்.
தமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பண பரிவர்த்தனைகள் பற்றிய முழு விவரங்களையும் சேகரிக்க இரண்டு நாட்கள் ஆகும். இப்போது யாரும் உண்மையான கட்டண வசூலைக் குறைத்து சொல்ல வாய்ப்பில்லாததால், இந்த கட்டணம் சரியானதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். நேரடியாக பணம் செலுத்தும் முறை குறைந்துவிட்டதும் இந்த தொகை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் " என்றார்.