12 மணி நேரத்தில் இந்தியாவின் முக்கிய இடங்களை சுற்றி பார்த்த தந்தையும் மகனும்.. கின்னஸ் சாதனை!
இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை வெறும் 12 மணிநேரத்தில் சுற்றிப்பார்த்த துபாயை சேர்ந்த அப்பா -மகன் ஜோடி கின்னஸில் இடம் பிடித்துள்ளனர்.
புதுடெல்லி: இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை வெறும் 12 மணிநேரத்தில் சுற்றிப்பார்த்த துபாயை சேர்ந்த அப்பா -மகன் ஜோடி கின்னஸில் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த முகமது தாகிர் என்பவரும், அவரது மகன் முகமது ஆயான்னும் துபாயில் வாழ்ந்து வருகின்றனர். முகமது தாகிர் அவரது மகன் முகமது ஆயான் உடன், இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் நடத்திய சாகச போட்டி ஒன்றில் கலந்துகொண்டனர். இவர்களை போலவே அந்த போட்டியில் மேலும் 22 பேர் கலந்துகொண்டனர் .
அந்த போட்டியின்படி இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை குறைந்த நேரத்தில் சுற்றிப்பார்த்து விட்டு வர வேண்டும். இதில் அனைத்து இடங்களையும் சுமார் 11 மணி நேரம் 33 நிமிடங்களில் சுற்றி பார்த்து சாதனை படைத்துள்ளனர் அந்த தந்தையும், மகனும்.
இதில் மிகவும் அதிசயமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பயணத்தை மேற்கொள்ள அவர்கள் பயன்படுத்தியது முற்றிலும் பொதுத்துறை வாகனங்கள் மட்டுமே. அதாவது ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி, அரசு பேருந்து, மற்றும் ரெயில்களில் பயணித்து, இந்தியாவில் உள்ள போக்குவரத்து நெரிசலில், சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தை இவ்வளவு குறைந்த நேரத்தில் சுற்றியுள்ளனர்.
இந்த பயணத்தில் தாஜ் மகால் துவங்கி, ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபதேபூர் சிக்ரி, ராஜஸ்தானில் உள்ள கியோலடியோ தேசிய பூங்கா, டெல்லியில் உள்ள முகலாய அரசர் உமாயுனின் கல்லறை, செங்கோட்டை, குதூப்மினார் உள்ளிட்ட இடங்களை அவர்கள் சுற்றிவந்துள்ளனர்.
இதற்குமுன் நடந்த போட்டியில், இதேபோல் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட கின்னஸ் சாதனையை இவர்களின் சாதனை முறியடித்துள்ளது. இதுதொடர்பாக துபாய் பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்த தந்தை முகமது தாகிர், இந்த முழு பயணத்திலும், பேருந்துக்காகவும், ரெயிலுக்காகவும் காத்திருந்த சமயங்களில் மட்டுமே ஓய்வெடுத்ததாகவும், அந்த நேரத்திலேயே தங்களது சாப்பாட்டை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.