பாஜக தலைவரை கல்லால் அடித்து விரட்ட பத்வா விட்ட கொல்கத்தா இமாம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியை தரக்குறைவாக பேசிய பாஜக தலைவர் திலிப் கோஷை கல்லால் அடித்து வெளியேற்ற பத்வா விடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில பஜாக தலைவர் திலிப் கோஷ் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை அவமதிக்கும் விதமாக பேசியுள்ளார். அவர் மமதா பற்றி கூறியதாவது, மமதா டெல்லிக்கு சென்று எந்த தடையும் இன்றி போராட்டங்கள் நடத்தினார். நாங்கள் நினைத்திருந்தால் அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து வெளியே தள்ளியிருக்க முடியும் என்றார்.
இதற்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு கோஷ் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள பிரபல திப்பு சுல்தான் மசூதியின் ஷாஹி இமாம் மவ்லானா நூருர்ரஹ்மான் பரகத்தி திலிப் கோஷுக்கு எதிராக பத்வா விட்டுள்ளார்.
மமதாவை தரக்குறவாக பேசிய கோஷை கல்லால் அடித்து மாநிலத்தை விட்டே விரட்ட வேண்டும் என பத்வா விட்டுள்ளார். பத்வா குறித்து கோஷ் கூறுகையில்,
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் பரகத்தி? அவர் எனக்கு எதிராக பத்வா விட இது ஒன்றும் வங்கதேசமோ, பாகிஸ்தானோ அல்ல. அவர் பத்வா விட்டால் திரிணாமூல் காங்கிரஸ் கேட்கும் பாஜக அல்ல. பரகத்திக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை போன்று. அவர் பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்திற்கு செல்ல திட்டமிடுகிறார் என நினைக்கிறேன் என்றார்.