வெளிநாட்டு முதலீடுகளால் நமக்கு அல்வா கூட கிடைக்காதே.. லாலு கிண்டல்!
ராஞ்சி: வெளிநாட்டு நேரடி முதலீடுகளால் இந்தியர்களுக்கு எந்தவித பலனும் கிடைக்காது. ஏன் அல்வா கூட கிடைக்காது என்று ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதற்கு நரேந்திர மோடி அரசு பொதுமக்கள் தனியார் பங்களிப்பு என்ற புல்லாங்குழலை வாசித்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு பணத்தை சம்பாதித்துவிட்டு லாபத்துடன் சென்றுவிடும். மக்களுக்கு அல்வா கூட கிடைக்காது.
ஷாங்காய் போன்ற 100 நகரங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஆண்டு பட்ஜெட் போன்று அதிக செலவாகும் என்பதால் ஷாங்காய் போன்ற ஒரு நகரை கட்டமைப்பதே கடினம்.
புல்லட் ரயில் திட்டம் அகமதாபாத்-மும்பை இடையே அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் உள்ளது. அந்த பகுதி மட்டும்தான் உண்மையான இந்தியா என்று நினைக்கிறார்கள். இது மக்களை மீண்டும் முட்டாளாக்கும் செயல்.
விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னதாக பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. இப்போது தக்காளி விலை கிலோ ரூ.60க்கு சென்றுவிட்டது என்றார் லாலு.