மோடி மீது தற்கொலைப் படை தாக்குதல் திட்டம்? வாரணாசி பயணம் ரத்து குறித்து 'திடுக்' தகவல்கள்
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தாலேயே அவரது வாரணாசி தொகுதி பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆந்திரா, ஒடிஷாவைத் தாக்கிய ஹூட்ஹூட் புயலா உத்தரப்பிரதேசத்திலும் கனமழை பெய்ததால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் உள்துறை அமைச்சகத்துக்க் உளவுத்துறை அனுப்பி வைத்த எச்சரிக்கை அறிக்கையைத் தொடர்ந்தே மோடியின் வாரணாசி பயணம் ரத்து செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தது போல வாரணாசியில் பிரதமர் மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனராமராம். இத்தாக்குதலை நடத்த தம்பதியினர் ஒருவரை தீவிரவாதிகள் அனுப்பி வைத்துள்ளனராம்.
இந்த தகவல்களை சேகரித்த உளவுத்துறைக்கு உள்துறை அமைச்சகத்துக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பி வைத்ததாம். இதனால்தான் மோடி வாரணாசி பயணத்தை ரத்து செய்தார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது வெளிப்படையாக மறுத்துவிட்டனர். கடந்த ஜூன் மாதம் முதலே பிரதமர் மோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மனித வெடிகுண்டுத் தாக்குதல் உட்பட பல்வேறு வகையான யுத்திகளை தீவிரவாதிகள் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவரது சொந்த தொகுதியான வாரணாசிக்கே செல்ல முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் இருப்பது திடுக்கிட வைக்கக் கூடியதாக இருக்கிறது.