பழசு புளிக்கும்... பாதுகாப்பான புதிய தொகுதிகளைத் தேடும் காங் எம்.பிக்கள்
லக்னோ: நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாதுகாப்பான தொகுதிகளைத் தேடி வருகிறார்களாம் உத்தரபிரதேச காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர்.
விரைவில் நாடாளுமன்றத் தேதியைத் தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட சில தினங்களிலேயே தங்களது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளதாம் காங்கிரஸ். அதற்கு முன்னேற்பாடாக தற்போதே 150 பேர் கொண்ட பட்டியலை அக்கட்சி தயார் செய்து விட்டதாகத் தகவல்கல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் எம்.பி.க்கள் பலர் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. அதற்குப் பதிலாக வேறு பாதுகாப்பான தொகுதிகளை கேட்டு மேலிடத்தை நச்சரிக்கின்றனராம்.
நடிகர் ராஜ்பப்பர்...
உதாரணமாக, நடிகர் ராஜ்பப்பர் கடந்த இடைத்தேர்தலில் பெரோசாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் தற்போது லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.
அலகாபாத்....
அதேபோல், இத்தொகுதியின் எம்.பி.யான மாநில கட்சி தலைவர் ரீட்டா பகுகுணா அலகாபாத் தொகுதியில் நிற்க விருப்பம் தெரிவித்து உள்ளார். எனவே கட்சி வட்டார தகவலின்படி லக்னோ தொகுதி நடிகர் ராஜ்பப்பருக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
மாநிலம் மாறும் அசாருதீன்....
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகம்மது அசாருதீன் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மொரதாபாத் தொகுதியை மாற்ற முடிவு செய்து உள்ளார். இந்த முறை அவர் ஆந்திரபிரதேசம் அல்லது மேற்குவங்காள மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறார்.
கமல் கிஷோர்...
பகரைச் தொகுதியில் வெற்றி பெற்ற கமல் கிஷோர் இம்முறை கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்கோன் தொகுதிக்கு முயற்சிப்பதாகத் தெரிகிறது. வெற்றி பெற வைத்த தொகுதி வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால், ஏன் பாஸ் இப்டி ஊரை மாத்தி, பேரை மாத்தி ஓடணும்....