'நாங்கள் வென்று விட்டோம்'.. உலக கோப்பையில் பாக். வெற்றியை கொண்டாடிய பெண் ஆசிரியை கைது!
ஜெய்ப்பூர்: இந்த டி20 உலகக்கோப்பையில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா- பாகிஸ்தான் போட்டி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்பட்ட இந்த போட்டி ஒன் சைட் கேமாக அமைந்தது.
பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
டயர்கள் தட்டுப்பாடு?. தீபாவளிக்கு பேருந்துகளை இயக்குவதில் சிக்கலா?.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்
பெண் ஆசிரியை கைது
இந்தியாவுடன் பல தோல்விகளுக்கு பிறகு தங்கள் அணி உலககோப்பையில் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் ரசிகர்கள் இதனை கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில் இந்தியாவிலும் சிலர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தானில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பெண் ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
''நாங்கள் வென்று விட்டோம்''
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் நபீசா அத்தாரி. இவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றவுடன் ''நாங்கள் வென்று விட்டோம்'' என்று வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினார். இந்த பதிவு உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலானது.
கண்டனம் தெரிவித்தனர்
''நமது நாட்டில் இருந்து கொண்டு, எதிரி நாட்டின் வெற்றியை கொண்டாடலாமா?'' என்று பல்வேறு தரப்பினரும் நபீசா அத்தாரிக்கு கண்டனம் தெரிவித்தனர். பள்ளி ஆசிரியை நபீசா அத்தாரி மீது அவரது பெற்றோர் உதய்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நபீசா அத்தாரியை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நபீசா சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்து முன்னணி அமைப்பினர்
ஆசிரியை நபீசா அத்தாரியின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி ஆசிரியை நபீசா அத்தாரி மீது இந்திய தண்டனை சட்டம் 153 பி பிரிவின் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். முன்னதாக இந்து முன்னணி அமைப்பினர் சிலர் ஆசிரியை நபீசா அத்தாரி பணியாற்றிய பள்ளிக்கு சென்று நமது நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய கீதம் பாடினர். இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் நபீசா அத்தாரியை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.