அணு ஆயுத குவிப்பு நாடுகளைப் பற்றி இந்தியா அலட்டிக் கொள்ளாதது ஏன் தெரியுமா?
அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவை அணு ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா இதைப் பற்றி கவலைப்பட்டுமா? என்ற கேள்வியெல்லாம் இனி நமக்கு தேவையில்லை..
இந்தியாவைப் பொறுத்தவரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அணு ஆயுத ஏவுகணைகள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் என சகலவிதமான அணு ஆயுதங்களையும் கொண்டதாகவே இருக்கிறது. இது குறித்து இந்தியாஸ்பென்ட் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 மெகாடன் அணு ஆயுதமான 210 ச.கி.மீ பரப்பளவை அதாவது தெற்கு மும்பையைப் போல 3 மடங்கு பரப்பை அழித்துவிடுமாம். அண்மையில் நாடுகளின் அணு ஆயுதக் குவிப்பு பற்றிய ஒரு ஆய்வறிக்கையை அணு விஞ்ஞானிகள் குழு வெளியிட்டிருந்தது.
பாக். வேகமான முன்னேற்றம்
அதில், பாகிஸ்தான் அணு ஆயுத குவிப்பில் வேகமாக முன்னேறி வருகிறது என்று நியூயார்க் டைம்ஸை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தென்னாசியா, அணு ஆயுத மோதல் அபாயம் உள்ள பகுதியாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலிடம் அமெரிக்காவுக்கு
அணு ஆயுத குவிப்பில் வழக்கம் போல அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடம் ரஷ்யாவுக்கு...
வரிந்து கட்டும் பாகிஸ்தான்..
3வது இடத்தில் பிரான்ஸ், 4வது இடத்தில் சீனா, 5வது இடத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இத்தகைய வல்லரசுகளுக்கு அடுத்த நிலையில் இருப்பது பரம எதிரி நாடான பாகிஸ்தான். இதற்குப் பின்னர்தான் இந்தியா வருகிறது.
இஸ்ரேலும்தான்..
இவ்வளவு பெரிய நாடுகளுக்குப் போட்டியாக சின்னஞ்சிறு தேசமான இஸ்ரேலும் அணு ஆயுதக் குவிப்பில் இடம்பிடித்திருக்கிறது. அணு ஆயுதங்கள் என்பவை 69 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது தான் கடையாக வீசப்பட்டன. அதன் பின்னர் எந்தப் போரிலும் அது பயன்படுத்தப்படவில்லை.
விமானங்கள்...
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆங்கிலோ-பிரெஞ்ச் ஜாகுர் போர் விமானங்களும் ரஷ்யாவின் சுகோர் போர் விமானங்களும் சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை தாங்கி செல்லக் கூடியவை.
சீனாவை எட்டும் ஏவுகணை
5 ஆயிரம் கி.மீ வரை தரைவழியாகப் பாய்ந்து தாக்கும் அக்னி -5 ஏவுகணை இந்தியாவிடம் உண்டு.. அதாவது அந்த ஏவுகணை சீனாவையும் எட்டிவிடும் என்பதை நினைவில் கொள்வோம். அதுவும் அக்னி ஏவுகணையை எந்த இடத்துக்கும் எளிதாக நகர்த்திச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவும் இத்தகைய வல்லமை பெற்றிருந்தாலும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்களை கடலில் இருந்து தாக்கும் வல்லமை இல்லை.
இந்தியாவின் நிலை
இந்தியா எப்போதுமே அணு ஆயுதத்தை நாங்கள் முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதியோடு உள்ளது. ஆனால் இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுப்போம் என்பதுதான் 2003ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் நிலைப்பாடு. மேலும் 1962ஆம் ஆண்டு இந்தியா-சீனா யுத்தம் நடைபெற்றது. அதன் பின்னர் 1964ஆம் ஆண்டு சீனா அணு ஆயுத சோதனை நடத்தியது.
அணு ஆயுத சோதனைகள்
அதைத் தொடர்ந்து பிரதமராக இருந்த லால் பக்தூர் சாஸ்திரி அணு ஆயுத சோதனைகள் குறித்த ஆய்வுகளுக்கு சிக்னல் கொடுத்தார். இதனடிப்படையில்தான் 1974ஆம் ஆண்டு பொக்ரானில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 1998ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா மீண்டும் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் அணு ஆயுத சோதனையை நடத்தியது.
இதனால்தான் எத்தனை நாடுகள் அணு ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டாலும் நம்ம தேசம் அலட்டிக் கொள்வதே இல்லை.