காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு... ராஜ்நாத் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பங்கேற்கிறது
பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தியத் தலைவர்கள் ஹவானாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
டெல்லி: கியூபாவின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு டிச. 4ம் தேதி ஹவானாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கியூபாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் கியூபாவில் காலமானார். பிடல் காஸ்ட்ரோவின் விருப்பத்திற்கேற்ப, அவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
பிடலின் சாம்பல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் பிடலின் சாம்பல் வைக்கப்பட்டு அங்கு கியூபா மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவரது சாம்பல் ஹவானா நகரில் உள்ள கல்லறையில் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி வைக்கப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட உள்ளது.
பிடல் காஸ்ரோவின் மறைவிற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கியூபா தலைநகர் ஹவானாவில் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறும் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் இந்தியா பங்கேற்கிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினர் கியூபா நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு பயணம் மேற்கொள்ள இயலாது என்பதால், அவருக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கியூபா செல்கிறார்.
ராஜ்நாத் சிங்குடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் நாளை டெல்லியில் இருந்து கியூபாவிற்கு செல்கின்றனர்.