பெண்களின் தலைமுடியை வெட்டும் விஷமக் கும்பலால் பதற்றம்... காஷ்மீரில் இணைய சேவை "கட்"!
காஷ்மீரில் பெண்களின் தலை முடியை பலவந்தமாக வெட்டிவிடும் குழுக்களால் ஏற்பட்ட கலவரம் காரணமாக இணைய சேவை முடக்கப்பட்டது.
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் சிலநாட்களாக சாலையில் செல்லும் பெண்களின் தலைமுடியை மர்ம நபர்கள் சேர்ந்து பலவந்தமாக வெட்டிவிடுகின்றனர். இதையடுத்து முடிகளை வெட்டும் நபர்கள் என சந்தேகிக்கப்பட்டு பலர் காஷ்மீரில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல பகுதிகளில் நடந்த தொடர் தாக்குதலை அடுத்து காஷ்மீரில் இணைய சேவை முடக்கப்பட்டது.
காஷ்மீரில் வெவ்வேறு பகுதிகளில் சிலநாட்களாக பெண்கள் சாலையில் தனியாக செல்லும் போது மர்ம நபர்கள் குழுவாக வந்து வலுக்கட்டாயமாக அந்தப் பெண்களின் முடிகளை வெட்டி விடுகின்றனர். காஷ்மீரில் நடக்கும் இந்த வினோத பிரச்சனை காரணமாக சில நாட்களாக காஷ்மீர் வீதிகள் பதற்றத்தில் உள்ளது.
யார் இந்தச் செயலை செய்வது என்பதை கண்டுபிடிக்க முடியாததால் அங்கு கலவரங்கள் மூண்டு வருகின்றன. முடிகளை வெட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டு பலரும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். முடிகளை வெட்டும் வீடியோக்கள் சில இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று சாலையில் நடந்து சென்ற 70 வயது முதியவர் அந்த வீடியோவில் இருந்த நபரின் ஜாடையில் இருந்ததால் ஒரு இளைஞரால் கல்லால் அடித்து கொல்லப்பட்டார். இதேபோல் காஷ்மீரின் வெவேறு பகுதிகளில் பலர் சந்தேகத்தின் பேரில் கல்லால் அடித்து தாக்கப்பட்டுள்ளனர். போலீசார் இவ்வாறு கல்லால் அடிக்கும் செயல்களில் ஈடுபடுவோர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
முடிகளை வெட்டும் குழுக்கள் என் சந்தேகிக்கப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பரவி வரும் மோதல் காரணமாக காஷ்மீரில் நேற்று முழுக்க இணைய சேவை முடக்கப்பட்டது. நேற்று மாலைக்கு மேல் மீண்டும் இணைய சேவை சீராக இயங்க ஆரம்பித்தது. இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.