'பத்மாவதி' படத்திற்கு திரையுலகம் ஓரணியில் ஆதரவு.. நாளை 15 நிமிடம் ஷூட்டிங் ரத்து
மும்பை: பத்மாவதி படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் நாளை மாலை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்த சினிமாத்துறையினர் தீர்மானித்துள்ளனர்.
சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பத்மாவதி என்ற பாலிவுட் திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்து அமைப்புகள், ராணியின் ராஜபுத்திர ஜாதி பிரிவினர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர், நடிகை போன்ற படத்துடன் தொடர்புள்ளோருக்கு வரிசையாக கொலைமிரட்டல்களை பகிரங்கமாக விடுக்கிறார்கள் வலதுசாரி இந்து அமைப்பினர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் அறிவித்திருந்தன.
பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானியும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பத்மாவதி படத்தை ஆதரிக்கும் வகையில், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் நாளை மாலை 4.15 மணியில் இருந்து 4.30 மணிவரை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்திவைக்க இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த முடிவுக்கு திரையுலகை சேர்ந்த 19 துணை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஒளிப்பதிவாளர்கள், எழுத்தாளர்கள், ஒப்பனை கலைஞர்கள், டப்பிங் கலைஞர்கள் போன்ற துணை அமைப்பை சேர்ந்த சுமார் 700 பேர் இந்த 15 நிமிட வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.