ஸ்பெக்ட்ரம் வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது... ஆ.ராசா, கனிமொழி கோர்ட்டில் ஆஜர்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பின் இறுதி வாதம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் வழக்கறிஞர் மனுசர்மா முதலில் இறுதிவாதங்களை இன்று முன்வைத்தார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுசெய்யப்பட்டதில் ஊழல் முறைகேடு நடைபெற்றது என்பது குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராசா விலக நேரிட்டது. ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர் . தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர் .
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 2011-ம் ஆண்டு ஏப்ரலில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிபிஐ தரப்பில் இறுதி வாதம் நடைபெற்றது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ஆ.ராசா தவறாக வழிநடத்தியதாக அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் குற்றம்சாட்டினார்.
இந்த வாதம் நிறைவடைந்ததை நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான இறுதி வாதம் இன்று தொடங்கியது. இதையொட்டி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இன்றைய விசாரணையில் முதலில் ஆ.ராசாவின் வழக்கறிஞர் மனு சர்மா இறுதிவாதத்தை முன்வைத்தார்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறும் நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதித் தீர்ப்பு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.