சொத்துக் குவிப்பு வழக்கு கவுண்ட்டவுன் தொடக்கம்! ஜெ. தரப்பு இறுதிவாதத்தை முன்வைத்தது!!
பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் கடும் கண்டனத்துக்குப் பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தமது இறுதிவாதத்தை தொடங்கினார்.
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 39 நிறுவனங்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரி பல மனுக்கள் அனைத்து நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடியாகி இருக்கின்றன. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதம் முடிவடைந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதம் மட்டுமே நடைபெற வேண்டி இருந்தது.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் நிறுவனம், தமது சொத்துகளை முடக்கியதை எதிர்த்து சிவில் மனுத்தாக்கல் செய்தது. இதனாலேயே இந்த வழக்கு முடியும் வரை சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையையே ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு சிறிதுகாலம் இடைக்கால தடை விதிக்கப்பட்டு வந்தது. பின்னர் லெக்ஸ் நிறுவனத்தின் வழக்கு சிவில் வழக்கு; ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கிரிமினல் வழக்கு. இதனால் ஒரு சிவில் மனுவுக்காக சொத்து குவிப்பு வழக்கு என்கிற கிரிமினல் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து இன்று முதல் குற்றம்சாட்டப்பட்டோரின் இறுதி வாதம் நடைபெறும் என்று பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று சிறப்பு நீதிபதி டிகுன்ஹா கூறியிருந்தார். இதன்படி இன்று காலை பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது.
ஆனால் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தமது இறுதி வாதத்தைத் தொடங்கவில்லை. இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆனாலும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் இறுதி வாதத்தை தொடங்கவில்லை. மீண்டும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதேபோல் 4 முறை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்த பின்னரே ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தமது இறுதிவாதத்தை தொடங்கினார். ஜெயலலிதா தரப்பு வாதம் முடிவடைந்த பின்னர் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பின் இறுதி வாதம் நடைபெறவுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டோரின் இறுதி வாதத்துடன் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிவுக்கு வருகிறது. எந்தத் தடையும் இல்லாமல் இறுதி வாதம் நடைபெற்றால் ஆகஸ்ட் இறுதியில் தீர்ப்புக் கூறப்படலாம் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது.
ஜெ. தரப்பு வாதம்
இன்றைய வாதத்தின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கில் கூடுதல் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்களின் இயக்குநர் சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, 5 நிறுவனங்களின் இயக்குனர்கள், பங்குதாரர்கள் பதவி வகித்த காலம் பற்றி நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சுரேஷ்குமார், 5 நிறுவனங்களில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பங்குதாரர்கள் என்று கூறினார். இதையடுத்து, பங்குதாரர்களின் சொத்து ஆவணங்கள், வங்கி பண பரிமாற்ற பட்டியலை தாக்கல் செய்ய சுரேஷ்குமாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.