காஷ்மீரை தொடர்ந்து நாகாலாந்து பிரச்சனைக்கும் சுமூக தீர்வை உருவாக்கும் மத்திய அரசு!
ஹோகிமா: ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து நாகாலாந்து பிரச்சனைக்கும் சுமூக தீர்வை உருவாக்க இருக்கிறது மத்திய அரசு. இது தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஓரிருநாட்களில் கையெழுத்தாகும் என்கின்றன தகவல்கள்.
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம் நீடிப்பதற்கு அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துதான் காரணம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. இதையடுத்து சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அத்துடன் பாகிஸ்தான், சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த காஷ்மீர் பகுதிகளே என்பதை பிரகடனம் செய்யும் வகையில் புதிய வரைபடத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பசும் பாலில் தங்கம்.. மாட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி சாப்பிடுங்க..மே.வங்க பாஜக தலைவர் பேச்சு
நாகா பிரச்சனை
இதனைத் தொடர்ந்து நீண்டகாலமாக இருந்து வரும் நாகாலாந்து பிரச்சனைக்கும் மத்திய அரசு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாகா இன மக்கள் வாழும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தனிநாடு- நாகாலிம் உருவாக்க வேண்டும் என்பதற்காக ஆயுதப் போராட்டத்தை சில குழுக்கள் நடத்தி வந்தன.
அமைதி ஒப்பந்தம்
இந்த குழுக்களுடன் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நாகா குழுக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது முழுமையான நாகா அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாளில் நடைமுறைக்கு வரக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீர்வு எப்படி இருக்கும்?
நாகா இன மக்கள் மணிப்பூரில், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேச பிற மாநிலங்களிலும் இருக்கின்றனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் நாகா அமைதி ஒப்பந்தம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாகா அமைதி ஒப்பந்தத்தின் சரத்துகள் என்னவாக இருக்கும்? புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டு எல்லைகள் மாற்றி அமைக்கப்படுமா? என்கின்ற கேள்விகள் எழுந்துள்ளன.
டெல்லியில் நாகாலாந்து துணை முதல்வர்
இது தொடர்பாக டெல்லியில் கருத்து தெரிவித்த நாகாலாந்து மாநில துணை முதல்வர் ஒய். பட்டான், நாகா அமைந்தி ஒப்பந்தமானது விரைவில் கையெழுத்தாக இருக்கிறது. அப்படி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் தற்போதைய நாகாலாந்து அரசின் நிலை என்ன என்பதை அறிய விரும்புகிறோம். இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றார்.
தீவிரவாத குழு வரவேற்பு
நாகாலாந்து ஆளுநரான ஆர்.என். ரவிதான் நாகா குழுக்களுடன் அமைதிப் பேச்சுகளை ஒருங்கிணைத்து வந்தார். நாகா தீவிரவாத குழுக்களில் ஒன்றான என்.எஸ்.சி.என் (ஐஎம்) மூய்வா பிரிவு அக்டோபர் 31- ந் தேதி வெளியிட்ட அறிக்கையிலும், நாகா இன மக்களின் பிரார்த்தனைகளுக்கு கடவுள் பதிலளித்துவிட்டார். இறுதி தீர்வை நோக்கி நாம் முன்னேறி உள்ளோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது போல வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் நாகாலாந்து பிரச்சனைக்கும் விரைவில் முடிவு ஏற்பட இருக்கிறது.