காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் 4 வாரத்தில் தீர்ப்பு... உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் 4 வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, இறுதி தீர்ப்பை கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி நீர் தேவைப்படுகிறது என பெங்களூர் அரசியல் நடவடிக்கை குழு என்ற தனியார் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூடு ஆகிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக ஏராளமான குழப்பங்கள் நிலவி வந்தன.
நாங்கள் இன்னும் 4 வாரத்தில்,அதாவது ஒரு மாதத்தில் இறுதி தீர்ப்பை வழங்கிவிடுவோம். அதன் பின்னர் யார் வேண்டுமானாலும் காவிரி விவகாரம் குறித்து வழக்கு தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்து அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்துவிட்டனர்.