ஜார்கண்ட்: ஆசிட் வீச்சில் பாதிக்கப்ட்ட சோனாலி முகர்ஜிக்கு அரசுபணி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வழங்கினார்.
சோனாலி முகர்ஜி.... இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தை சேர்ந்த சோனாலி முகர்ஜி, காதலிக்க மறுத்ததால், மூன்று இளைஞர்களால், "ஆசிட்' வீச்சுக்கு இலக்காகி, முகத்தை பறிகொடுத்தவர்.
கடந்த 2003 ஏப்ரல் 22ம் தேதி நள்ளிரவு நேரத்தில் சோனாலியின் அழகிய முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்தனர் மூன்று கொடூரர்கள்.
சிதைந்த சோனாலி
முகம் பூராவும் வெந்து, இரு கண்களும் குருடாகி, ஒரு காது முற்றிலும் கேட்காத நிலையை அடைந்த சோனாலி, அதற்கு பிறகு வெளியே வருவதே இல்லை.
கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள், ஒன்றிரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு, வெளியே வந்து விட்டனர். ஆனால், அந்தப் பெண் வீட்டிலேயே முடங்கி விட்டாள்.
ரூ.25 லட்சம் பரிசு
எனினும், தன்னம்பிக்கையை கைவிடாமல், தொலைக்காட்சியில், நடிகர், அமிதாப் பச்சன் நடத்திய , "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு பங்கேற்று 25 லட்சம் ரூபாயை வென்றார்.
அரசுப் பணி
இந்த நிலையில் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வழங்கினார்.
கடுமையான தண்டனை
அப்போது பேசிய ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் சொனாலி முகர்ஜி , தமக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்றும் தம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.