உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்தது பாக்.... ஹபீஸ் சையது தீவிரவாதியாக அறிவிப்பு!
உலக நாடுகளின் நெருக்கடிக்கு அடி பணிந்து மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையதை பாகிஸ்தான் தீவிரவாதியாக அறிவித்துள்ளது.
டெல்லி: கடந்த 2008 மும்பை தாக்குதலின் போது மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதை தீவிரவாதி என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் போலீசார் ஹபீஸ் சையதின் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைமையகம் அருகே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
அண்டை நாடான, பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவனாகவும் உள்ளான் ஹபீஸ் சையது. மும்பையில், 2008ல் நடந்த தாக்குதலின் மூளையாகக் கருதப்படும், ஹபீஸ் சையீதை, தேடப்படும் குற்றவாளியாக, ஐ.நா., அறிவித்து உள்ளது. லஷ்கர்-ஈ-தொய்பா, ஜமாத்-உத்-தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐநா தடை விதித்துள்ளது.
ஐநா பட்டியலில் மொத்தம் 27 தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் உள்ளன. ஹபீஸ் சையதை தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையம் ஹபீஸ் சையதை அந்த நாடு தீவிரவாதியாக அறிவித்து சட்டம் கொண்டுவந்துள்ளதுஉண்மைதான் என்று தெரிவித்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் சட்டம் ஹபீஸ் சையதை தீவிரவாதி என்றும் ஜமாத் உத் தவா அமைப்பை தீவிரவாத அமைப்பாகவும் அறிவித்துள்ளது.
ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அலுவலகங்கள் மற்றும வங்கிக்கணக்குகளை முடக்கவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.