நாட்ல மக்கள் தொகை அதிகம்.. கியூவூம் பெருசாதான் இருக்கும்.. அருண் ஜேட்லி அசால்ட் பதில்
டெல்லி: அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இந்த மாதிரி கியூவெல்லாம் எதிர்பார்த்ததுதான் என்று, அசால்ட்டாக கூறியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களை தியாகம் செய்துவிட்டு ஏடிஎம்களில் தவம் கிடக்கிறார்கள். மழை, வெயில் என பாராமல் அவர்கள் கஷ்டம் தொடர்ந்தபோதும், இன்னும் உரிய பணம் கைக்கு வரவில்லை.
இந்த நிலையில் அருண் ஜேட்லியின் இந்த பேட்டி எரியும், கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது.
பணமற்ற பொருளாதாரம்
என்டிடிவி சேனலுக்கு அளித்த பிரத்யேகமான பேட்டியில் அருண்ஜேட்லி இவ்வாறு கூறினார். அவர் மேலும் என்ன கூறினார் என்பதை பாருங்கள்: நவம்பர் 8ம் தேதி இருந்த அளவுக்கு பணப்புழக்கம் இனி இந்தியாவில் இருக்காது. எல்லாமே பணமற்ற பரிவர்த்தனையாக மாறும் என கூற முடியாது. ஆனால் பெரும்பாலான புழக்கம் பணமற்றதாக இருக்கும்.
உள்நாட்டு உற்பத்தி
வணிகமும், வர்த்தகமும் அதிகரிக்கவே செய்யும். ஆனால் ரூபாய் நோட்டுக்கள் மூலமான பரிவர்த்தனைதான் குறையும். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போதும். கருப்பு பணத்தை ஒழித்த கையோடு, இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்துவிடும். அதுவும் சுத்தமான மொத்த உள்நாட்டு உற்பத்தியாக (GDP) இருக்கும் என்றார் ஜேட்லி.
கியூ இருக்கும்ங்க
மொத்த மதிப்பில் 85 சதவீதம் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்களாக இருந்த நிலையில், திடீரென அவற்றுக்கு தடை விதித்தது மக்களுக்கு பாரமாகிவிட்டதே, ஏடிஎம்களிலும், வங்கிகளிலும், மக்கள் கியூவில் நிற்க வேண்டியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த ஜேட்லி, இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த ஒரு நாட்டில் ஒரு திட்டத்தை கொண்டுவரும்போது, அதில் கியூ இருக்கத்தான் செய்யும். ஆனால், மக்கள் அரசுக்கு சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள். சமூக கொந்தளிப்பு என்ற ஒரு நிலை நாட்டில் கிடையாது.
மக்கள் சும்மா இருக்காங்க
பணமதிப்பிழப்பு என்பது அரசியல் நிதி பயன்பாட்டை வெளிப்படையாக்கிவிடும். இப்போது 3 முறை வரி விதிப்பு ஆய்வு நடக்கிறது. வருங்காலத்தில் இது ஒரே முறைதான் நடக்கும். மக்களுக்கு இதனால் நன்மைகளே அதிகம் என்பதால், ரூபாய் நோட்டு விவகாரம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.