இடஒதுக்கீடு சாத்தியமில்லை என்று தெரிந்தும் காங்கிரஸ்-பட்டேல்கள் நாடகம் : சீறும் அருண் ஜெட்லி
காங்கிரஸ் - பட்டேல்கள் கூட்டணி ஒரு மோசடி நாடகம் என்று அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
டெல்லி : இனியும் குஜராத்தில் இடஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்று தெரிந்தும் காங்கிரஸ் - பட்டேல் குழு நாடகம் ஆடுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்து உள்ளார்.
குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதில், பா.ஜ.க.,வை தோற்கடிக்க காங்கிரஸ் - பட்டேல் போராட்டக்குழுவின் ஆதரவினை பெற்றுள்ளது. பட்டேல்கள் தங்களுக்கு போதுமான இடஒதுக்கீடு இல்லை என்று குஜராத்தில் ஆளும் பா.ஜ.க.,வை எதிர்த்து போராட்டம் நடத்திவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பட்டேல் போராட்டக்குழு தலைவர் ஹர்திக் பட்டேல், காங்கிரஸ் தங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்ததாகவும், இடஒதுக்கீடு வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளதால் காங்கிரஸிற்கு தேர்தலில் ஆதரவு வழங்க இருப்பதாகவும் நேற்று அறிவித்தார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் - பட்டேல்கள் அமைத்திருப்பது ஒரு மோசடி கூட்டணி. இனி சட்டப்படியும், அரசியலமைப்பும் படியும் இடஒதுக்கீடு சாத்தியமில்லை என்று தெரிந்தும், மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே இவர்கள் இணைந்துள்ளார்கள். உச்சநீதிமன்றத்தின் சட்ட வரைவுபடி,ஒரு மாநிலத்திற்கு 50 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு சாத்தியம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், இதன் காரணமாகவே குஜ்ஜார்களுக்கு ராஜஸ்தானில் இடஒதுக்கீடு சதவிகிதம் அதிகப்படுத்த முடியாமல் இருக்கிறது. இது தெரிந்தும் காங்கிரஸ் - பட்டேல் தலைவர்கள் மக்களை ஏமாற்றத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடியை 'டீ விற்பவர்' என்று இளைஞர் காங்கிரஸ் விமர்சித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று இந்திய ஜனநாயகம் அனுமதித்து இருக்கிறது. அதே சமயம் பெரிய குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் தான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஜனநாயகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. காங்கிரஸ் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு போதும் இது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று காட்டமாக விமர்சித்து உள்ளார்.