ஜிஎஸ்டி வரி தாக்கலுக்கான அபராத தொகை தள்ளுபடி... குஜராத்தை கவர ஜேட்லி அறிவிப்பு
ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்பவர்களுக்கான அபராத தொகை தள்ளுபடி செய்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்பவர்களுக்கான அபராதத் தொகை தள்ளுபடி செய்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார். குஜராத்தில் உள்ள வணிகர்களை குறிவைத்து சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இந்த வரி முறையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் வரிக்கான கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு சி.ஜி.எஸ்.டிக்கு 100 ரூபாய் மற்றும் எஸ்.ஜி.எஸ்.டிக்கு 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் வீதம் அபாராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் நாட்டின் ஜிஎஸ்டிக்கான முதல் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கலாம் என ஜிஎஸ்டி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்று மத்திய அரசு அபராத தொகையை ரத்து செய்தது. எனினும் தாமத தாக்கலுக்கான வட்டியை வரி செலுத்துவோர் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வரி செலுத்த தாமதிக்கும் வணிகர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. மேலும் அவ்வாறு விதிக்கப்படும் அபராதம், வரியைவிட அதிகமாக இருப்பது வேதனையாக உள்ளது என்று வேதனை தெரிவித்து அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
To facilitate taxpayers, late fee on filing of GSTR-3B for Aug&Sept has been waived. Late fee paid will be credited back to taxpayer ledger.
— Arun Jaitley (@arunjaitley) October 24, 2017
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி தாக்கலுக்கான அபராதத் தொகையை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளுபடி செய்து மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த வணிகர்களை கவருவதற்காகவே இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாக கூறப்படுகிறது.