ஹிட்லரே தேவலாம் போல... இந்திரா காந்தி ரொம்ப மோசம்... அருண் ஜேட்லி பரபரப்பு குற்றச்சாட்டு
ஹிட்லருடன் இந்திரா காந்தியை ஒப்பிட்டு பேசினார் அருண் ஜேட்லி. இதற்கு பிரதமர் மோடியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி , முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசியுள்ளதால் பரபரப்பு எழுந்தது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது முடிந்து 43 ஆண்டுகள் நேற்றுடன் முடிவடைந்தன. அச்சமயத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் ஒருவராவார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் கட்டுரைகளாக எழுதியுள்ளார். அதை நேற்றைய தினம் ஒப்பிட்டிருந்தார். அதில் ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லருடன் இந்திராவை ஒப்பிட்டுள்ளார்.
தினப்படி பட்ஜெட்
அந்த கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது: எமர்ஜென்சி காலத்தில் நான் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டேன். பின்னர் ஒரு வாரம் கழித்து அம்பாலா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டேன். எனக்கு அப்போது எனக்கு தினப்படி பட்ஜெட்டில் ஒதுக்கீட்டு தொகையாக ரூ.3 வழங்கப்பட்டது.
ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது
ஒரு வார்டில் 24 கைதிகள் இருப்பர். அவர்களுக்கு காலை டீ, சிற்றுண்டி, மதிய உணவு, மாலை டீ மற்றும் இரவு உணவு ஆகியவற்றை அந்த 3ரூபாயில்தான் பெற வேண்டும். மொத்தம் ரூ. 60-இல் 24 கைதிகளை சிறை நிர்வாகம் எப்படியோ நிர்வகித்துவிட்டது. பல மாத போராட்டத்துக்கு பிறகு இந்த தொகை ரூ.5-ஆக உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு குடும்ப உறுப்பினர்களை பார்க்க சிறை கைதிகளுக்கு அனுமதியில்லை.
அத்துமீறல்
மீண்டும் சில மாதங்கள் கழித்து மாதத்துக்கு ஒரு முறை அதுவும் சிறிது நேரம் மட்டுமே குடும்ப உறுப்பினர்களை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. 1933-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லரின் படைகள் அத்துமீறலை முன்மாதிரியாக கொண்டுதான் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஜனநாயகம் சர்வாதிகாரமாக மாற்றம்
ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியல் சட்டத்தை ரத்து செய்யவில்லை. மாறாக, குடியரசு அரசியல் சட்டத்தை பயன்படுத்தி, ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றினர். இந்திரா காந்தி ஒருபடி மேலே சென்று, இந்தியாவை பரம்பரை ஜனநாயகமாக மாற்றினார். ஹிட்லர் தனது செயல்கள் அரசியல் சட்டத்தின் 4 மூலைகளுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
சர்வாதிகார செயல்கள்
அதேபோல், இந்திராவும் அரசியல் சட்டப்பிரிவு 352-இன் கீழ், நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். இதில் அடிப்படை உரிமைகளுக்கான 359-ஆம் பிரிவை முடக்கி, செயலிழக்க செய்தார். ஹிட்லரும், அவரது நாட்டு அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவை சுட்டிக் காட்டி, மக்களை பாதுகாப்பது என்ற பெயரில் சர்வாதிகார செயல்களை நியாயப்படுத்தினார்.
நீர்த்து போக செய்தல்
ஹிட்லர், எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்தது போலவே, இந்திரா காந்தியும், எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்து, நாடாளுமன்றத்தில் செயற்கையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை உருவாக்கினார். அதை வைத்து விரும்பத்தகாத அரசியல் சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றினார். இதில், 42-வது சட்டத்திருத்தம், ஐகோர்ட்டுகளின் அதிகாரங்களை நீர்த்துப்போக செய்வதாகும்.
கடும் விமர்சம்
அரசியல் சட்டப்பிரிவு 368-ஐ திருத்தி மாற்றியதன் மூலம், அரசியல் சட்ட திருத்தத்தை நீதிமன்ற பார்வைக்கு அப்பாற்பட்டதாக ஆக்கினார். ஹிட்லர் செய்யாத சில விஷயங்களை கூட இந்திரா காந்தி செய்தார். அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றை திருத்தினார். நாடாளுமன்ற நிகழ்வுகளை பொதுமக்களுக்கு சென்றடையாவண்ணம் ஊடகங்கள் அதைப்பற்றி எழுத தடை விதித்தார். இதை ஹிட்லர் கூட செய்யவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.