திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா லோக்சபாவிலும் நிறைவேறியது !
டெல்லி: திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா மக்களவைிலும் நிறைவேறியது. 443 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவான ஜிஎஸ்டி கடந்த ஆண்டு லோக்சபாவில் நிறைவேறியது. காங்கிரஸ் எதிர்ப்பால் ராஜ்யசாபாவில் மசோதா உடனடியாக நிறைவேறவில்லை.
காங்கிரஸ் கூறிய திருத்தங்கள் சிலவற்றை மசோதாவில் மத்திய அரசு கொண்டுவந்ததையடுத்து, கடந்த வாரம் ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியது. 203 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தது.
லோக்சபா
லோக்சபா நிறைவேற்றிய ஒரு சட்டம் ராஜ்யசபாவில் சிறு திருத்தத்திற்கு உள்ளானாலும், அந்த சட்ட மசோதாவுக்கு மீண்டும் லோக்சபாவில் ஒப்புதல் வாங்க வேண்டியது அவசியம். அதன்படி, ஜி.எஸ்.டி சட்ட மசோதா லோக்சபாவில் இன்று மதியம், ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது.
விளக்கம் அளித்த ஜேட்லி
அப்போது, ராஜ்யசபாவில் புகுத்தப்பட்ட திருத்தங்கள் குறித்து ஜேட்லி, உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும், பல்வேறு வரி வசூல் முறை நடைமுறையில் இருப்பது வளர்ச்சியை தடுக்கும் என்றும், இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரி வரி விதிப்பு கொண்டுவருவது நல்லது என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் எனவும் ஜேட்லி விளக்கினார்.
வரி மீது வரி வேண்டாம்
வரி மீதே வரி விதிக்கும் பழைய நடைமுறை இந்த சட்டத்தால் நீக்கப்படும் என்றும் ஜேட்லி உறுதியளித்தார். வரி இழப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு அடுத்த 5 வருடங்களும் இழப்பீடு தொகை முழுமையாக வழங்கப்படும் என்றும் ஜேட்லி குறிப்பிட்டார்.
4 மணி நேர விவாதம்
இந்த திருத்தப்பட்ட மசோதாவுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தர வேண்டும் என்றும் ஜேட்லி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, உறுப்பினர்கள் உரையாற்றினர். மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, துணை சபாநாயகர் தம்பிதுரை (அதிமுக), சபாநாயகர் இருக்கையில் இருந்தார். உறுப்பினர்கள் விவாதிக்க 4 மணி நேரமே தரப்படும் என அவர் அறிவித்தார். எனவே 6 மணிக்கு மேல், மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 443 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதிமுக உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
விப் உத்தரவு
பாஜக மட்டுமின்றி காங்கிரசும் தனது உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க பங்கேற்கும் வகையில், விப் உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீண்ட பயணம்
பாஜக தனிப்பெரும்பான்மை கொண்டிருப்பதால், இந்த மசோதா லோக்சபாவில் எளிதில் நிறைவேறியது. இதன்பிறகு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏனேனில் குறைந்தபட்சம் 16 மாநில சட்டசபையிலாவது, அரசியல் சாசன 122வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பிறகே ஜி.எஸ்.டி மசோதாவுக்கு முழு அங்கீகாரம் கிடைக்கும்.