பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்.1-ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாடு மிகப் பெரும் பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் பிப்ரவரி 1-ல் தாக்கலாகும் மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார தேக்க நிலை, வேலைவாய்ப்பின்மை விவகாரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந் தேதி தொடங்குகிறது.
நடப்பாண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
கிரீன் சிக்னல் கொடுத்த திமுக... காங்கிரஸிலிருந்து திமுகவுக்கு தாவும் பிரமுகர்கள்
டெல்லியில் ஆலோசனை
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்களிடமும் பிரதமர் மோடி பட்ஜெட் தொடர்பாக கருத்துகளை கேட்டிருக்கிறார்.
2 கட்டங்களாக கூட்டத் தொடர்
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொட்டரை ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11 வரையும் மார்ச் 2-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரையும் 2 கட்டங்களாக கூட்டப்படுகிறது.
வீழ்ச்சியில் ஏற்றுமதி இறக்குமதி
நாடு தற்போது மிகப் பெரும் அளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியும் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சிக்கான அறிவிப்புகள் இடம்பெறுமா? ஜிஎஸ்டி வரிவிதிப்புகள் முறையில் மேலும் மாற்றங்கள் இடம்பெறுமா? என்பது தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.
கிடைக்குமா வரிச்சலுகைகள்?
அதேபோல் பல்வேறு துறையினரும் வரிச்சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். வருமான வரிவிதிப்பில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு. இத்தனை எதிர்பார்ப்புகளையும் மத்திய பட்ஜெட் முழுமையாக பூர்த்தி செய்யுமா?