பணமதிப்பிழப்பிற்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
டெல்லி: உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று சந்தேகப்படும்படியான பணப்பரிவர்த்தனையானது 480 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிதித்துறை புலனாய்வு பிரிவின் தகவல் கூறுகிறது.
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 8, 2016ம் ஆண்டு 8 மணியளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி தீவிரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை உடனுக்குடன் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.
முன்ஏற்பாடுகள் இன்றி திடீரென அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கமின்றி மக்கள் திண்டாடினர். தங்கள் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை கூட எடுக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பொருளாதார நிலைகுலைவு
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் நிலைகுலைந்தது, மக்கள் ஏடிஎம் ஏடிஎம்களாக பணம் தேடி அலைந்தனர். போதுமான அளவு பணம் கிடைக்காமல் திண்டாடிய மக்களுக்கு 'டிஜிட்டல் இந்தியா' வழியை காட்டியது மத்திய அரசு. அதாவது பணப்பரிமாற்றங்கள் முழுவதையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற அறிவுறுத்தியது.
கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகம்
இந்நிலையில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததற்குப் பின்னர் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாகவும் மத்திய அரசின் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
480 சதவீதம் அதிகரிப்பு
2015-16 நிதியாண்டில் இருந்ததை விட கள்ள நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016- 17ம் நிதியாண்டில் 480 சதவீதம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவின் ஆய்வறிக்கை கூறுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்ட நிலையில் 2016-17 நிதியாண்டில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளதாக நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு குறிப்பிடுகிறது.
நெருக்கடி தரும் அறிக்கை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எவ்வளவு கறுப்புப்பணம் பிடிபட்டுள்ளது என்ற விவரம் இன்னும் வெளியிடப்படாத நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவின் இந்த அறிக்கை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல அமைந்துள்ளது.