22 ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டும் 'மாயாவி' தாவூத் எங்கே? ஆப்கன் எல்லையில் பதுங்கல்?
டெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருக்கும் இடம் தெரியாது என்று லோக்சபாவில் உள்துறை இணை அமைச்சர் தெரிவித்திருப்பது உளவுத்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் ஹரிபாய், தாவூத் இப்ராஹிம் பதுங்கி இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது; இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்திலேயே இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.
அப்படியானால் 'தாவூத் இப்ராஹிம் எங்கே? உயிரோடுதான் இருக்கிறாரா? அல்லது தனது இருப்பிடத்தை கராச்சி, லாகூர் போன்ற இடங்களில் இருந்து ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைக்கு மாற்றிவிட்டாரா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இவ்வளவு நாளும் சொன்னாங்களே..
தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் பதுங்கி இருக்கிறார் என மத்திய அரசு அண்மைக்காலம் வரை உறுதியாக கூறிவந்தது. இதே உள்துறை அமைச்சகமும் கூட, தாவூத்தை நாடு கடத்தி கொண்டுவர முயற்சிக்கிறோம்... பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று கூறிவந்தது.
கராச்சி, லாகூரில் பதுங்கல்..
அத்துடன் கராச்சியின் கிளிஃப்டன் புறநகரில்தான் தாவூத் இருப்பதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்திருந்தன. இந்த பகுதியில்தான் கோட்டை போன்ற வீட்டில் 24 மணிநேர பாதுகாப்புடன் தாவூத் இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதேபோல் லாகூரிலும் தாவூத் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. நமது ஒன் இந்தியா இணையதளத்துக்கு பேட்டியளித்த 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி. சகாய், லாகூரில் சகலவசதிகளுடனும் பாதுகாப்புடன் தாவூத் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பாகிஸ்தானில் வெகு சகஜமான தாவூத் நடமாடியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆப்கான் எல்லையில்?
இருப்பினும் கடந்த ஆண்டு சில ஊடகங்கள் தாவூத் தனது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால் உளவுத்துறை அதிகாரிகளோ இதை நிராகரிக்கின்றனர்ன். ஏனெனில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. அப்படி தாவூத் அந்த பகுதிக்கு போயிருந்தால் நிச்சயம் ராக்கெட் தாக்குதலிலோ ஆளில்லா விமானங்களின் தாக்குதலிலோ தாவூத் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்புகள் உண்டு.
அப்ப பாகிஸ்தானிடம் கொடுத்த ஆதாரம்...
இந்த நிலையில் லோக்சபாவில் மத்திய அரசு தாவூத் இருப்பிடமே தெரியாது என கூறியிருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஏனெனில் மத்திய அரசு பாகிஸ்தானிடம் தாவூத் இப்ராஹிமின் இருப்பிடம் தொடர்பான ஆதாரங்களைக் கூட கொடுத்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது. மத்திய அரசு இப்படி கூறியிருந்தாலும் கராச்சி அல்லது லாகூரில்தான் தாவூத் இருக்கக் கூடும் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.
தாவூத் ஆடியோ
அண்மையில் கூட தாவூத் துபாயில் ஒரு சொத்து வாங்குவது குறித்த ஆடியோ வெளியாகி இருந்தது. கராச்சியில் இருந்து துபாயில் உள்ள நபருடன் தாவூத் பேசுவதாகத்தான் அந்த ஆடியோ இருந்தது. இப்படி இருக்கும் போது மத்திய அரசு தவறுதலாக லோக்சபாவில் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டதா? அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக தாவூத் இருக்கும் இடமே தெரியவில்லை என ஒரு அறிக்கை தாக்கல் செய்ததா? என்ற கேள்வி எழுகிறது.
என்ன காரணம்?
பொதுவாக புலனாய்வு அமைப்புகளும் உளவு அமைப்புகளும் ஒரு ஆபரேஷனை மேற்கொள்ளும் போது அதுபற்றி ஊடகங்களில் அதிகளவு செய்திகள் வருவதை விரும்பாது.. அதனடிப்படையில்தான் தாவூத் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படி ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.