யாரா இருந்தாலும் தவறு தான்.. அமேசான் பிரைமின் 'மிர்சாபூர்' நிகழ்ச்சி மீது சரமாரியாக வழக்கு
மிர்சாபூர்: அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் 'மிர்சாபூர்' தொடரின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டிருப்பது ஓடிடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது பிரைம் நேரங்களில் முக்கியமான வேலைகளை செய்கிறோமோ இல்லையோ, அமேசான் பிரைம் பார்க்காமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை. மூவிஸ், ஷோஸ் என்று வெரைட்டி கட்டி விருந்து வைப்பதில் கில்லாடியான ஓடிடி தளம் இது.
இந்த தளத்தில் ஒளிபரப்பாகும் பிரபல ஷோ 'மிர்சாபூர்'. இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக மிர்சாபூரின் கோட்வாலி தேஹத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சமூகத்தில் பகைமையை ஊக்குவித்தல், தவறான கதைக்களம், மிர்சாபூர் மாவட்டத்தை மோசமாக காண்பித்தல் மற்றும் சட்டவிரோத உறவுகளை திரையில் காண்பித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுடன் அரவிந்த் சதுர்வேதி என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சி "அவரது மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது" என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களான ரித்தேஷ் சித்வானி, ஃபர்ஹான் அக்தர் மற்றும் பவுமிக் கோண்டலியா ஆகியோர் மீது IPC 295A, 504, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மிர்சாபூர் எஸ்பி அஜய் குமார் கூறுகையில், "தவறான காட்சிகள் மற்றும் சட்டவிரோத உறவுகளை இந்த வெப் சீரிஸ் காட்டுவதாக அரவிந்த் சதுர்வேதி புகார் அளித்ததன் அடிப்படையில் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மற்றும் தளத்திற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.