மும்பையில் மரச்சாமான் கடையில் பயங்கரத் தீ விபத்து - தீயில் கருகி ஒருவர் பரிதாப பலி!
மும்பை: மும்பையில் மரச்சாமான்கள் விற்கும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, நாக்பாடா பகுதியில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் காலை 11 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். திடீரென கடையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது.
கொழுந்து விட்டு எரிந்த தீ:
சிறிது நேரத்தில் தீ கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர்.
குறுகலான கடைப் பகுதி:
தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாத குறுகலான பகுதி என்பதால் தீயணைப்பு படை வீரர்கள் மட்டும் தண்ணீர் குழாய்களை கொண்டு சென்று கடையில் எரிந்த தீயை சுமார் 4 மணி நேரம் போராடி அணைத்தனர். இதற்கிடையே தீயில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என கடையின் உள்ளே சென்று தீயணைப்பு வீரர்கள் சோதனை செய்தனர்.
ஒருவர் பரிதாப பலி:
அப்போது அங்கு உடல் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த நாக்பாடா போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மரப் பொருட்கள் நாசம்:
தீயில் கருகி உயிரிழந்தவர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார், தீ விபத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.