மும்பை: மேக் இன் இந்தியா கலை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து- உயிர்சேதம் தவிர்ப்பு
மும்பை: மும்பையில் 'மேக் இன் இந்தியா' வார விழாவின், போது நடந்த கலை நிகழ்ச்சி மேடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் உருவானது. சிறப்பு விருந்தினர்களும், பொதுமக்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் தொடர் முயற்சியால் தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தியாவை உலகின் உற்பத்தி தளமாக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக மும்பையில் வர்த்தக கண்காட்சி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஞாயிறன்று தொடங்கப்பட்டது.
"மேக் இன் இந்தியா வீக்" என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த வார விழா கண்காட்சியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அமிதாப்பச்சன், மாநில முதல்வர் பட்னாவிஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில். கலை நிகழ்ச்சி நடைபெற்ற மேடை ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் அரங்கம் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இருந்து மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ்,, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், நடிகை காத்ரீனா கைப், ஹேமமாலினி உள்ளிட்டோர், உடனடியாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கலை நிகழ்ச்சிகளை காண வந்திருந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், உடனடியாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீவரர்களின் தொடர் முயற்சியால் தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்த விழா மேடை, முழுவதுமாக தீயில் கருகியது.
தீ விபத்து பரபரப்பு அடங்கிய உடன் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பட்நவிஸ், தீ விபத்து குறித்து பிரதமர் மோடி விவரங்கள் கேட்டறிந்ததாகவும், அதை பற்றி தான் விளக்கமாக எடுத்துரைத்ததாகவும் கூறினார். தொடரந்து அவர் தீயணைப்பு துயைினருக்கு பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகின் 68 நாடுகளில் 9 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.