திருப்பதி மலையில் தீ: 500 ஏக்கர் சந்தன மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசம்!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் வனப் பகுதியில் கடந்த 3 நாட்களாக எரிந்து வரும் காட்டுத் தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி மலைப் பாதையை ஒட்டிய காடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சுமார் 500 ஏக்கரில் சிவப்பு சந்தன மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாயின.
கொழுந்து விட்டு எரியும் தீ
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிறிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. மங்கலம் பகுதி மரங்களில் பற்றிய தீ பரவி திருமலை பாபவிநாசனம், காகுலகோணா வனங்களில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும்,திருப்பதி மலைப்பாதை 18வது கொண்டை சி வளைவில் இருந்து 4வது கொண்டை ஊசி வளைவு வரையிலும் பரவி எரிந்தது.
பரவி வரும் தீ
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராட்டி வருகின்றனர். காற்று பலமாக வீசி வருவதால் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது.
சந்தன மரங்கள் நாசம்
திருப்பதி கோவில் பூஜைக்காக சேஷாசலம் மலை 30 ஏக்கரில், ஸ்ரீகந்தம் வகை சந்தனமரங்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த பகுதியில் தீ பரவாமல் இருக்க, தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர்கள் வருகை
தீயை அணைக்க விசாகப்பட்டினம் மற்றும் அரக்கோணத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட இருப்பதாக திருமலை தேவஸ்தான இணைசெயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
கடத்தல் கும்பல்
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரி வெங்கடரமணா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சேஷாசலம் வனப்பகுதியில் சிவப்பு சந்தனமர கட்டைகள் கடத்தல் கும்பல் வனத் துறையினரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக காடுகளுக்கு தீ வைக்கின்றனர். அந்த தீ 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவி எரிந்தது.
500 ஏக்கர் மரங்கள்
இதில் சுமார் 500 ஏக்கரில் வளர்ந்து நின்ற சிவப்பு நிற சந்தன மரங்கள் எரிந்து சாம்பலாயின. இதேபோல் மான், பாம்பு, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் தீயில் உயிரிழந்துள்ளன.
மின் உற்பத்தி நிறுத்தம்
தீ காரணமாக காக்குல கொண்டா பகுதியில் உள்ள 7 காற்றாலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.அடர்ந்த வனப்பகுதிக்குள் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால், தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை" இதனால் காட்டுத் தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.