வானிலிருந்து தீப்பிழம்பாக கேரளாவில் சிதறி விழுந்தவை எரிகற்கள் தான்... விஞ்ஞானிகள் தகவல்
திருவனந்தபுரம்: பலத்த சத்தத்துடன் நடுவானில் சிதறி தீப்பிழம்புகளாக கேரளாவில் விழுந்தது எரிகற்கள் தான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கண்ணணூர், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 6 மாவட்டங்களில் கடந்த வெள்ளியன்று நள்ளிரவு, வானில் பலத்த சத்தத்துடன் திடீர் தீப்பிழம்பு தோன்றியது. பின்னர் அது அப்படியே பூமியில் விழுந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
வானில் இருந்து விழுந்த தீப்பிழம்பு மின்னல் வேகத்தில் ராக்கெட் போல் பயணித்ததாகவும், பயங்கர சத்தத்துடன் பூமியில் விழுந்ததாகவும், அப்போது நில அதிர்வை உணர்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர்.
சிதறி விழுந்த தீப்பிழம்பு..
இந்த மர்ம தீப்பிழம்பை இந்த 6 மாவட்டங்களில் 145க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வானில் இருந்து தீப்பிழம்பாக விழுந்த மர்மப்பொருள், கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிதறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
உயிர்ச்சேதம் தவிர்ப்பு...
அதிர்ஷ்டவசமாக இந்தத் தீப்பிழம்புகள் குடியிருப்புகள் மீது விழவில்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் கருகின.
கருகிய நிலம்...
எர்ணாகுளம் மாவட்டம் கரிமல்லூர் அருகே பெரிய அளவில் நிலம் கருகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, சிதறி விழுந்த தீப்பிழம்பு அப்பகுதியில் விழுந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வானிலை இலாகாவினரும், மாநில பேரிடர் மேலாண்மை குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
எரிகற்கள் தான்...
இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விஞ்ஞானி குரியகோஸ் கூறுகையில், ‘எங்களது முதல் கட்ட ஆய்வில் கரியமல்லூர் கிராமத்தில் விழுந்தது, எரிகற்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இரும்பும், நிக்கலும் கலந்தது...
அந்த இடத்தில் நாங்கள் சேகரித்த பொருட்கள் மிகவும் சிறிய அளவில் இருந்தன. எனினும், இவை அதிக எடையைக் கொண்டிருந்தன. இவற்றில் இரும்பும், நிக்கலும் அதிக அளவில் கலந்து காணப்படுகிறது.
அபூர்வவகை எரிகற்கள்...
இது அதிக ஈர்ப்பு விசையுடன் பூமியில் விழுந்ததால்தான் பலத்த அதிர்வு ஏற்பட்டு உள்ளது. இது அபூர்வ வகை எரிகற்கள் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை...
பொதுமக்கள் அளித்து வரும் தகவல்களின் அடிப்படையில் மர்மப் பொருள் விழுந்த இடங்களுக்குச் சென்று ஆராய்ந்து வரும் வல்லுநர்கள், தீப்பிழம்பில் இருந்து சிதறி விழுந்ததாகக் கருதப்படும் பொருட்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.