வானிலிருந்து கேரளாவில் சிதறி விழுந்த தீப்பிழம்பு... தொட வேண்டாம் என எச்சரிக்கை
திருவனந்தபுரம் : கேரளாவில் பலத்த சத்தத்துடன் வானில் இருந்து வெடித்து, தீப்பிழம்பாக கீழே விழுந்த மர்மப் பொருளை பொதுமக்கள் தொட வேண்டாம் என வானிலை இலாகா எச்சரித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கண்ணணூர், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு, வானில் பலத்த சத்தத்துடன் திடீர் தீப்பிழம்பு தோன்றியது. பின்னர் அது அப்படியே பூமியில் விழுந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
வானில் இருந்து விழுந்த தீப்பிழம்பு மின்னல் வேகத்தில் ராக்கெட் போல் பயணித்ததாகவும், பயங்கர சத்தத்துடன் பூமியில் விழுந்ததாகவும், அப்போது நில அதிர்வை உணர்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
தீயில் கருகிய தென்னைமரங்கள்...
இந்த மர்ம தீப்பிழம்பை இந்த 6 மாவட்டங்களில் 145க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் நேரில் பார்த்துள்ளனர். வானில் இருந்து தீப்பிழம்பாக விழுந்த மர்மப்பொருள், கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிதறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தென்னை மரங்கள் உள்பட பயிர்கள் தீயில் கருகி சாம்பலாகி உள்ளது.
உயிர்ச்சேதம் தவிர்ப்பு...
அதிர்ஷ்டவசமாக குடியிருப்புகள் மீது இந்த தீப்பிழம்பு விழாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இரும்பு வளையம்...
இந்நிலையில், ஆலப்புழா அருகே புச்சாக்கல் என்ற இடத்தில் ராஜேஷ் என்பவர் வீட்டு முன்பு தீப்பிழம்பில் இருந்து சிதறிய ஒரு இரும்பு வளையம் போன்ற ஒரு மர்ம பொருள் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீப்பிழம்பின் சிதறல்கள்...
இதேபோல் எர்ணாகுளம் பிரவூர் என்ற இடத்தில் ஒரு வீடு அருகேயும், ஓலஞ்சேரி வனவூர் பகுதியிலும், ஆராமுளா பந்தளம் பகுதியிலும் கிறிஸ்தவ ஆலயங்கள் அருகேயும் தீப்பிழம்பின் சிதறல்கள் விழுந்துள்ளன.
ஆராய்ச்சி...
தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற வானிலை இலாகாவினரும், மாநில பேரிடர் மேலாண்மை குழுவினரும் இந்த மர்ம தீப்பிழம்பு பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
கருகிய நிலம்...
இதற்கிடையே, எர்ணாகுளம் மாவட்டம் கரிமல்லூரில் தீப்பிழம்பினால் பெரிய அளவில் நிலம் கருகி இருந்தது தெரிய வந்தது. இதனால் இந்த இடத்தில்தான் தீப்பிழம்பு விழுந்திருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
தொடக்கூடாது...
பொதுமக்கள் அளித்து வரும் தகவல்களின் அடிப்படையில் மர்மப் பொருள் விழுந்த இடங்களுக்குச் சென்று ஆராய்ந்து வருகின்றனர் வல்லுநர்கள். எனவே, தீப்பிழம்பில் இருந்து சிதறி விழுந்த பொருட்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது என பொதுமக்களை வானிலை இலாகா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விண்கற்களா...?
இது தொடர்பாக கேரள வானிலை விஞ்ஞானி ராஜகோபாலன் கம்மத் கூறுகையில், ‘பூமியின் ஈர்ப்பு விசையால் விண்கற்கள் ஈர்க்கப்பட்டு பூமிக்குள் நுழைந்தபோது தீப்பிழம்பு உருவாகி இருக்கலாம். சீனா விண்ணுக்கு அனுப்பிய ஒரு செயற்கை கோளை செயலழிக்க செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே இந்த தீப்பிழம்பு செயலிழக்கச் செய்யப்பட்ட செயற்கை கோளினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்' என்றார்.