சசிகலாவின் வசதிகளை அம்பலப்படுத்திய காவல் அதிகாரி ரூபா... மகளிர் தினத்தில் என்ன செய்தார் தெரியுமா?
பெண்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆண்டு மகளிர் தினத்தில் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா தன்னுடைய இசை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் தரப்படுவதாக புகார் கூறிய முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா மகளிர் தினத்தில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த மகளிர் தினத்தில் என்னுடைய இசை வீடியோவை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருப்பதாக ரூபா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். 1965ல் வெளிவந்த மீனாகுமாரி, தர்மேந்திரா நடித்த காஜல் படத்தில் வரும் "தோரா மன் தர்பன் கேஹலாயே" பிரபல பாடலை பாடியுள்ளார்.
ரூபாவின் புகைப்படங்கள், செய்திகளில் வந்த வீடியோக்களை வைத்து இந்தப் பாடல் தொகுக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்தில் ஆடியோ பதிவு செய்யப்பட்டு 4 மணி நேரம் வீடியோ படப்பிடிப்பும் இதற்காக செய்யப்பட்டதாக ரூபா தெரிவித்துள்ளார். இது பெண்களின் நலனுக்காக இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டதாக ரூபா கூறியுள்ளார்.
ஏன் பாடல் வெளியீடு?
இந்தப் பாடலை ஏன் குறிப்பாக தேர்ந்தெடுத்தார் என்றும் ரூபா விளக்கம் அளித்துள்ளார். ஆளுமைத்திறன் பற்றி வெளிப்படையாக சொல்லும் இந்தப் பாடல் தனக்கு எப்போதுமே உந்துசக்தியாக இருப்பதாக ரூபா தெரிவித்துள்ளார்.
முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்த ரூபா
ரூபா முதன் முதலில் மீடியா வெளிச்சத்திற்கு வந்தது தர்வாட் எஸ்பியாக இருந்த போது மத்திய பிரதேச முதல்வர் உமா பாரதியை கைது செய்த போது தான். கலவர வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சசிகலாவின் சிறை வசதிகளை அம்பலப்படுத்தினார்
இதனைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிற்கு சலுகைகள் தரப்படுவதாக தைரியமாக சொன்னார். மேலும் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் இதற்காக லஞ்சம் வாங்கினார், இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என்றும் ரூபா பகிரங்கமாக தெரிவித்தார்.
|
பல திறன் படைத்த ரூபா
தன்னுடைய இசை வீடியோ பற்றி கூறிய பெண்களுக்கு உதாரணமாக கூறிய ரூபா " உங்களுடைய அறிவு என்பது கண்ணாடி போன்றது. உங்கள் சிந்தனைகள் எப்படி இருக்கிறதோ அதுவே பிரதிபலிப்பை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார். இந்த இசையை பதிவு செய்திருப்பவர் ஆலென், இவர் பல கன்னட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையை தவிர்த்து ரூபா பரதநாட்டியம், கிளாசிக்கல் இசையும் கற்றிருக்கிறார். துப்பாக்கியை குறி பார்த்து துள்ளியமாக சுடுவதில் தேர்ச்சி பெற்றவர் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.