இடைத்தேர்தல்கள்: மபியில் பாஜக, திரிபுராவில் சிபிஎம், மே.வங்கத்தில் திரிணாமுல் முன்னிலை!
இடைத்தேர்தல்களில் மபியில் பாஜக, திரிபுராவில் சிபிஎம் கட்சிகள் வென்றுள்ளன.
டெல்லி: 7 மாநிலங்களில் நவம்பர் 19-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் பாஜக, திரிபுராவில் சிபிஎம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.
அஸ்ஸாம், அருணாச்சல், மபி, மேற்கு வங்கம், திரிபுரா, தமிழகம், புதுவை ஆகிய 7 மாநிலங்களில் 4 லோக்சபா மற்றும் 9 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில் பெரும் கொந்தளிப்புக்கு இடையே இத்தேர்தல் நடைபெற்றது.
அஸ்ஸாமில் பாஜக
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அஸ்ஸாம் லக்மிபூர் லோக்சபா தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அருணாச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முன்னாள் முதல்வர் கலிக்கோ பவுல் மனைவி டேசிங்கு பவுல் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவர் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மே.வங்கத்தில் திரிணாமுல்
ம.பி.யின் நேபாநகர் லோக்சபா தொகுதியில் பாஜக வென்றுள்ளது. மேற்கு வங்கத்தில் கூச்பீகார், தம்லுக் லோக்சபா தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
திரிபுராவில் சிபிஎம்
திரிபுராவில் இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலுமே சிபிஎம் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் எப்போதும் 2-வது இடத்தில் இருந்து வரும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பாஜக விஸ்வரூபமெடுத்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக
தமிழகத்தில் ஆளும் அதிமுக 3 தொகுதிகளிலும் புதுவையில் நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமியும் வென்றுள்ளனர்.