கொரோனா: காஷ்மீர், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தானில் மொத்தம் 5 பேர் பலி- உயிரிழப்பு 18
டெல்லி: ஜம்மு காஷ்மீர் , மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா தாக்குதலுக்கு இன்று மட்டும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டும் வருகிறது. இன்று 2-வது நாளாக லாக்டவுன் நீடிக்கிறது.
காஷ்மீரில் ஒருவர் பலி
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஶ்ரீநகரில் 65 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று நோய் தாக்கி உயிரிழந்துள்ளார். இதனை ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் உறுதி செய்துள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய நிலையில் அந்த முதியவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலி
இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இன்று ஒருவர் கொரோனா நோயால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் இன்றும் ஒருவர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்திலும் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
அடுத்தடுத்து உயிரிழப்புகள்
இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனாவுக்கு 2-வது நபர் பலியாகி இருக்கிறார். மேலும் ராஜஸ்தானில் 73 வயது முதியவரும் கொரோனாவுக்கு பலியானார். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.