காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து.. கொடூரமாக பழி வாங்கிய தீவிரவாதிகள்.. நாடோடிகளை கொன்று வீசினர்
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் சடூரா பகுதியில் தீவிரவாதிகளால் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் மன்சூர் அஹமத் கோஹ்லி மற்றும் மொஹத் காதிர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருமே உறவினர்களாகும். பலியான இருவருமே பூஞ்சில் வசித்து வந்தவர்கள். டிரால் பகுதியில் நாடோடிகளாக சுற்றி திரிந்தனர்.
ஆகஸ்ட் 20 ம் தேதி இருவரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர், அதன் பின்னர் காவல்துறையினர் அவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை போலீசார் டிரால் வனப்பகுதியில் இருந்து அவர்களின் உடல்களை மீட்டனர்.
இதுதொடர்பாக, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலைகளுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மோடி அரசு, 370 வது பிரிவின் கீழ், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாக ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கியுள்ளது.
இந்த நிலையில், சிறப்பு சலுகை ரத்துக்கு பிறகு, காஷ்மீர் மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதலாக, இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தென் இந்தியாவில், தீவிரவாதிகள் ஊடுருவி, காஷ்மீர் விவகாரத்திற்கு பழி வாங்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்த நிலையில், காஷ்மீரில் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.