சபாஷ் அவானி... கடினமான போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்தார் முதல் இந்திய பெண் விமானி!
மிக் ரக போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் முதல் பெண் விமானியான அவானி.
Recommended Video
காந்திநகர்: இந்தியாவின் முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதி எம்.ஐ.ஜி., 21 ரக போர் விமானத்தைத் தனியாக ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
இந்திய இராணுவத்தில் உள்ள விமானப் படையில், பெண்களைப் பணியமர்த்த மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் மூன்று பெண் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் தான் அவானி சதுர்வேதி. மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில், இவர்களுக்கு பிரத்யேகமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூவரும் முறைப்படி போர் விமானிகளாகப் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படைத்தளத்தில் எம்.ஐ.ஜி.,-21 ரக போர் விமானத்தை அவர் தனியாக ஓட்டிச் சென்று இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவைச் சேர்ந்தவரான அவானி, இதன் மூலம் போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின்முதல் பெண் விமானி என்ற பெருமையைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். சாதாரண போர் விமானங்களைவிட மிக் ரக போர் விமானங்களை இயக்குவது மிகவும் கடினம் ஆகும்.
இங்கிலாந்து, அமெரிக்கா, உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே போர் விமானிகளாக பெண்களை பயிற்றுவித்து வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
இவர்கள் மூவரைத் தொடர்ந்து, ஜாம்நகர் விமானபடை தளத்தில் மேலும் மூன்று பெண்களுக்கு அடுத்தகட்ட போர் விமானப்பயிற்சி விமானப்படை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.