நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் தீர்ப்பு- "இஸ்பாட்" இயக்குநர்கள் 2 பேர் குற்றவாளிகள்; 31-ல் தண்டனை
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் முறைகேட்டு வழக்குகளில் முதல் தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவன இயக்குநர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதிபதி பரத் பராஷரைக் கொண்ட டெல்லி தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவற்றில் ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவனம் மீதான வழக்கும் ஒன்று. இதன் இயக்குநர்கள் ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் மீது தவறான தகவல்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிலக்கரித்துறை அமைச்சர் தாசரி நாராயண ராவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கிரிமினல் சதி, மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவன இயக்குநர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க சட்டம் வகை செய்துள்ள நிலையில் இருவருக்குமான தண்டனை வரும் 31-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
நாட்டை உலுக்கிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.