இந்திய டிஷ் சாப்பிட்டு, பனாரஸ் பட்டுப்புடவைகளை பார்வையிட்ட ஆப்பிரிக்க 'முதல் பெண்மணிகள்'!
டெல்லி: இந்திய-ஆப்பிரிக்க உச்சிமாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள ஆப்பிரிக்க நாட்டு அதிபர் மனைவிகள் (முதல் பெண்கள்) முன்னிலையில், நம் நாட்டு பட்டு ஆடை மகிமையை எடுத்துரைக்கும் வகையில் பெண்கள் பேஷன் ஷோ நடத்தி காண்பித்தனர்.
தலைநகர் டெல்லியில், கடந்த இரு நாட்களாக இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள ஆப்பிரிக்க நாட்டு அதிபர்களின் மனைவிகளுக்கு, இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்ட அரசு முடிவு செய்தது.
இதையடுத்து இந்தியா வந்துள்ள ஆப்பிரிக்க நாட்டு அதிபர்களின் மனைவிகள் 17 பேர், அக்ஷர்தாம் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வாரணாசியின் புகழ்பெற்ற பனாரஸ் பட்டு ஆடைகளை அணிந்து இளம் பெண்கள் கேட் வாக் சென்றனர். அந்த ஆடைகள் பற்றிய விவரங்களை அதிபர்களின் மனைவிகள் கேட்டறிந்தனர்.
பின்னர், இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் குனால்கபூர் தயாரித்த உணவு சாப்பிட்டனர். இரவில், ஆப்பிரிக்க அதிபர்களுக்கும், அவர்கள் மனைவிமார்களுக்கும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.