குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா உடல் தகனம்
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜியின் உடல் டெல்லியில் உள்ள லோடி சாலை மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜிக்கு இதயம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்க்காக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 10.51 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு துணை குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சுர்வா முகர்ஜியின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக இன்று காலை டெல்லி வந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் ஆறுதல் கூறினர்.
இன்று பகல் சுமார் 12 மணியளவில் சுர்வா முகர்ஜியின் உடல் அவரது மகன் வீட்டில் இருந்து லோடி சாலையில் உள்ள மின் தகன மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு சென்று, அங்கே உள்ள மின் தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.