ஆர்டர் பண்ணு.. தண்ணி அடி.. மகாராஷ்டிராவை சீரழிக்க வரும் "ஆன்லைன் மது"!
சாலைவிபத்துக்களை தடுக்க வீடு தேடி மதுபானம் வரஉள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா: ஆர்டர் செய்தால் வீடு தேடி வரப்போகிறதாம் மதுபானம்!!
ஊரில் வார வாரம் கூடும் சந்தைக்கு போய் பொருட்களை வாங்கி வந்தனர் நம் முன்னோர்கள். காலம் மாறியது.. மார்க்கெட்கள் பெருகியது... காலம் இன்னமும் மாறியது... ஆன்லைனில் எல்லாமே வீடு தேடி வர ஆரம்பித்தது.
மதுபானம்
நேற்றுகூட ஒரு பெண் ஆன்லைனில் தன் பெற்ற குழந்தையை விற்றாராம். அந்த அளவுக்கு விற்பனை வளர்ச்சியும், நுகரும் தன்மையும் நவீனமயமாகி விட்டது. இப்போது மதுபானமும் வீடு தேடி வரப்போகிறதாம்.
அதிரடி நடவடிக்கை
நம்ம ஊரில் இல்லை. மகாராஷ்டிராவில்! என்னமோ ஏதோ என்று அந்த மாநில அரசை தவறாக கணக்கு போட்டுவிட வேண்டாம். குடித்துவிட்டு வண்டியை ஓட்டி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் பெருகுவதால்தான் இந்த அதிரடி நடவடிக்கையாம். அதனால்தான் வீட்டிற்கே சென்று மதுவை தரும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய போகிறது அந்த மாநிலம்.
விபத்துக்கள்
எவ்வளவு சொன்னாலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்பதால், விலைமதிப்புள்ள உயிரை காக்கவும், சாலை விபத்துக்களை குறைக்க இப்படி ஒரு முடிவு என்கிறர் மாநில அமைச்சா் சந்திரசேகா் பவன்குலே. இதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுமாம்.
சாய்ஸ், சான்ஸ்
அதாவது ஆர்டர் செய்பவர் பெயர், முக்கியமாக ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன்பிறகுதான் ஹோம் டெலிவரி செய்யப்படும் என்று அமைச்சா் சந்திரசேகா் பவன்குலே தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தமிழகத்துக்கு ஒருவேளை வந்துவிட்டால், டாஸ்மாக் கடையுடன் ஆன்லைனையும் சேர்த்து நம்ம குடிமகன்கள் பயன்படுத்தி கொள்வார்கள். சாய்ஸ், சான்ஸ் இரண்டையுமே விட்டு வைக்க மாட்டார்கள் என்றே யூகிக்க தோன்றுகிறது.