30 வருஷத்தில் முதல் முறை.. அயோத்தியில் ராமர் கோயிலுக்கு கல் செதுக்கும் பணியை நிறுத்தியது விஹெச்பி
Recommended Video
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கல் செதுக்கும் பணியினை 30 ஆண்டுகளில் முதல் முறையாக விஸ்வ இந்து பரிஷத் நிறுத்தி உள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து கோயில் கட்டுவதற்கான பணிகளை நிறுத்தி உள்ளது அந்த அமைப்பு.
அயோத்தியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, கரசேவகர்களால் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இந்த இடம் கடவுள் ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. இதேபோல் இந்த இடம் தங்களுக்கே சொந்தம் என்று முஸ்லிம் அமைப்புகளும் கூறி வருகின்றன.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பது குறித்த தீர்ப்பினை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி முழுவதும் துணை ராணுவம் குவிப்பு.. 20 தற்காலிக சிறைகள் அமைப்பு.. உச்ச கட்ட பரபரப்பு
பணி நிறுத்தம்
இந்நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து 30 ஆண்டுகளில் முதல்முறையாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயிலுக்கான கல் செதுக்கும் பணியினை நிறுத்தி உள்ளது.
விஷ்வ இந்து பரிஷத்
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்த 1990ம் ஆண்டு முதல் அயோத்தியில் ராமர் கோயிலுக்காக கல் செதுக்கும் பணியினை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
பணி நிறுத்தப்படவில்லை
1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் 6 மாதம் தடை செய்யப்பட்டது. அப்போது கூட ராமர் கோயிலுக்கான கல் செதுக்கும் பணி நிறுத்தப்படவில்லை.
பணிகள் நிறுத்தம்
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து முதல்முறையாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயிலுக்கான கல் செதுக்கும் பணியினை நிறுத்தி உள்ளது. விஹெச்பி செய்தி தொடர்பாளர் சரத் சர்மா இதுபற்றி கூறுகையில், உயர்மட்ட தலைவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்செதுக்கும் பணியினை மேற்கொண்டு வந்த கைவினை கலைஞர்களை பணியினை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அனுப்பிவிட்டோம். ராம்ஜென்பூமி நியாஸ் கல்செதுக்கும் பணியினை எப்போது மீண்டும் தொடர்வது என்பது குறித்து முடிவு செய்வார் என்றார்.
1.75 லட்சம் கற்கள் தேவை
இதனிடையே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை 1.25 லட்சம் கற்களை அந்த அமைப்பு செதுக்கி உள்ளது. இது கீழ்தளம் வரை சரியாக இருக்கும் என்றும் மேல்தளம் மற்றும் முழுமையாக கட்டி முடிக்க 1.75 லட்சம் கற்கள் தேவை என்றும் விஹெச்பி அமைப்பு கூறியுள்ளது.
மத ஒற்றுமை
இதனிடையே விஹெச்பி செய்தி தொடர்பாளர் சரத் சர்மா அயோத்தி தீர்ப்பு குறித்து கூறுகையில், தீர்ப்பு இந்துகளுக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ யாருக்கு சாதகமாக வந்தாலும் இருவரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கவேண்டும். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் நல்லுறவில் உறவை கெடுக்கும் எந்தவொரு சம்பவமும் நடக்கக்கூடாது என்பதை நாம் அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.