மீன், சிக்கன் சாப்பிட்ட பின் கோயிலுக்குள் சென்ற சித்தராமையா.. தேர்தல் ஆயுதத்தை ரெடி செய்த பாஜக
பெங்களூர்: மீன், சிக்கன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குள் சென்று இந்துக்கள் மனதை கர்நாடக முதல்வர் சித்தராமையா புண்படுத்திவிட்டதாக கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த எதிர்க்கட்சியான பாஜக கடும் பிரயத்தனம் செய்து வருவதன் வெளிப்பாடாக இந்த அழுத்தம் பார்க்கப்படுகிறது.
நடந்த சம்பவம் இதுதான்: கடந்த வாரம், ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய சென்ற முதல்வர் சித்தராமையா, புகழ் பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பொறித்த மீன், சிக்கன் சுக்கா
முன்னதாக அவர் தங்கியிருந்த இடத்தில் அமைச்சர்கள் சிலரோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். மதிய உணவில் பொறித்த மீன், நாட்டுக்கோழி சுக்கா ஆகியவை இடம் பெற்றிருந்தன. இதை படம் பிடித்து சில கன்னட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
பக்தியே முக்கியம்
இந்த சர்ச்சை குறித்து சித்தராமையா பதிலளிக்கையில், "எந்த கடவுளும், அசைவ சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குள் வரக்கூடாது என கூறவில்லை. வேடன் கண்ணப்பன் மான் கறியை சிவபெருமானுக்கு படைத்ததாக புராணம் உள்ளது. எனவே இதில் சர்ச்சைக்கு இடமில்லை" என்றார்.
மனசு சுத்தமாக இருந்தால் போதும்
மேலும், சித்தராமையா கூறுகையில், குறிப்பிட்ட ஆடை அணிந்தோ, குறிப்பிட்ட சாப்பாட்டை சாப்பிட்டோதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் சொன்னது கிடையாது. பக்தனின் மனது சுத்தமாக இருக்க வேண்டும், நேர்மையானவனாக இருந்தால் போதும் என்று தெரிவித்தார்.
அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு போக கூடாது
இதனிடையே இன்று நிருபர்களிடம் பேசிய, எடியூரப்பா, "சித்தராமையா கோடிக்கணக்கான இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதற்கு முன்பாக அவர் உபவாசம் இருந்தார். அன்று நாள் முழுக்க சாப்பிடாமல்தான் வந்து சாமி தரிசனம் செய்தார். இதுதான் மோடிக்கும், சித்தராமையாவுக்கும் உள்ள வித்தியாசம்" என்றார்.
கடவுளாச்சு, பக்தனாச்சு
இதனிடையே, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே, தனி உதவியாளர் வீரு ஷெட்டி அளித்த பேட்டியில், "கோயிலுக்குள் இதைத்தான் சாப்பிட்டுவிட்டு வர வேண்டும் என்ற விதிமுறையை நாங்கள் பிறப்பித்தது இல்லை. பக்தனுக்கும், கடவுளுக்கும் நடுவேயான உறவுதான் கோயில் தரிசனம் என்பது. கோயில் விதிமுறைப்படி, மது அருந்திவிட்டு வரக்கூடாது" என்றார். கர்நாடகாவை சேர்ந்த சில மூத்த பக்தியாளர்கள் அளித்துள்ள பேட்டியில், சில குறிப்பிட்ட வேண்டுதல், பூஜைகளுக்குத்தான் பக்தன் விரதம் இருப்பதோ, அசைவம் தவிர்ப்பதோ வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார்கள்.