தமிழக மீனவர்கள் பிரச்சினை.. அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
டெல்லி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது மற்றும் சிறை பிடிக்கப்படுவது தொடர்பாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதில் இலங்கைக்கு பங்கு இல்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அளித்த பதில் இதுதான்:
2017 மார்ச் மாதம் 6ம்தேதி இரவு 10.30 மணிக்கு பாக் ஜல சந்தி பகுதியில் இந்திய மீனவர் பிரிட்ஜோ என்பவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது. ஆனால் இலங்கை தரப்பு, தாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுத்தது.
இருப்பினும் இலங்கை அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. 2017ல் இதுவரை 37 இந்திய மீனவர் படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்லது. 215 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது.
உரிய ராஜாங்க ரீதியிலான நடவடிக்கை மூலம், 200 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்கள் விவகாரத்தை இந்திய அரசு உயரிய வகையில் கையாண்டுள்ளது. இந்திய பிரதமர் இதுகுறித்து இலங்கை பிரதமர் மற்றும் அதிபரிடம் தனது இலங்கை விஜயத்தின்போது ஆலோசித்தார். இந்திய வெளியுறவு அமைச்சரும் இலங்கை பிரதமரிடம் இதுபற்றி விவாதித்துள்ளார். ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்திற்காக இந்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 3 குழு மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குந்துகல் மற்றும் மூக்கையூர்ர பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.