தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள்தான்.. மோடி இலங்கையிடம் பேச வேண்டும்.. டி. ராஜா அதிரடி
ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்திய கம்யூனிஸ் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி. ராஜா கூறியதாவது: இலங்கை கடற்படையின் இந்த சம்பவம் வன்மையான கண்டனத்திற்கு உரியது. இலங்கை படையினர் சர்வ தேச நெறிமுறைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
கடற்பரப்பில் மீன் பிடிக்கும் மீனவர்களை சுட்டுக்கொல்வது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இது முதல் சம்பவமும் இல்லை. இதுதான் கடைசியான சம்பவம் என்று சொல்வதற்கும் இல்லை. இந்திய அரசாங்கம் இந்திய மீனவர்களின் உரிமையை காக்கவும், நலன்களை காக்கவும் தவறிவிட்டது.
மீனவர்களுக்கு எதிரான உடன்பாடு
இதில் முக்கிய பிரச்சனை கச்சத்தீவு உடன்பாடு. இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து பல முறை நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்திருக்கிறோம். அது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. கச்சத்தீவு உடன்பாடு என்பது இரு தரப்பு உடன்பாடு. ஆனால் அது இந்திய மீனவர்களுக்கு எதிரான உடன்பாடாக மாறிவிட்டது.
கேள்விக்குறியான மீன்பிடி
கச்சத்தீவு உடன்பாடு இன்று கேள்விக் குறியாகிவிட்டது. இந்த உடன்பாட்டால் கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமை பறிபோய்விட்டது. அவர்களின் உரிமையை பாதுகாக்க இந்திய அரசும் தவறிவிட்டது.
இந்திய குடிமக்கள்தான்…
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், புதுச்சேரியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்திய மீனவர்கள். அவர்கள் இந்திய குடிமக்கள். அவர்களின் உரிமையை, நலனை பாதுகாப்பது இந்திய அரசின் கடமை. இந்தக் கடமையில் இருந்து மத்திய அரசு தவறி வருகிறது.
எச்சரிக்கை
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் பாராமுகமாக செயல்படுகிறது. இலங்கை அரசிடம் இந்திய அரசு இந்த நேரத்தில் பேசி இருக்க வேண்டும், அந்த நாட்டிடம் மிகக் கடுமையான முறையில் வாதிட்டிருக்க வேண்டும். இலங்கை படையினர் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வதை அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க கேட்டிருக்க வேண்டும்.
நிரந்தர தீர்வு
கச்சத்தீவு குறித்து பேச இலங்கை தயாராக இல்லை என்றால் அரசியல் ரீதியாக இந்திய அரசு பிரச்சனையை எழுப்ப வேண்டும். இதுகுறித்து போதிய அளவு மோடி அரசு அக்கறை காட்டவில்லை. கச்சத்தீவு உடன்பாட்டிற்கு பின்னர்தான் நாம் இந்த புது பிரச்சனையை எதிர் கொள்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு உடன்பாட்டை மறுஆய்வு செய்ய வேண்டும். இதற்கு இந்திய அரசு தயாராக இல்லை.
மத்திய அரசின் பாராமுகம்
தமிழ்நாடு பல்வேறு நிலைகளில் கவனிக்கப்படவில்லை என்ற குற்றாச்சட்டு இருக்கிறது. மீனவர்கள் பிரச்சனை, காவிரி நீர் பிரச்சனை, நெடுவால் பிரச்சனை, ஜல்லிக்கட்டு பிரச்சனை, பாலாறு பிரச்சனை, பவானி ஆறு பிரச்சனை என எதுவானாலும் தமிழ்நாடு போதுமான அக்கறையுடன் கவனிக்கப்படுவதில்லை. ஆக, தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
நேரடி பேச்சு
தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச வேண்டும். வெளிநாட்டு அமைச்சர் வெளியுறவு அமைச்சரோடு பேச வேண்டும். ஏன் இதை செய்யவில்லை என்று பாஜக அரசு விளக்க வேண்டும் என்று டி. ராஜா கூறியுள்ளார்.