குளச்சலில் ஆளுநரை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!
குளச்சலில் மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Recommended Video
குளச்சல் : ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட குளச்சல் வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் தமிழகத்தையே கலக்கு கலக்கிய ஓகி புயல் கடந்த 30-ஆம் தேதி உருவானது. இதையடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் இடுப்பளவு சூழ்ந்து கொண்டது. இந்நிலையில் புயல் வருவதற்கு முன்பே கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் ஆயிரக்கணக்கில் கரை திரும்பவில்லை.
பன்வாரிலால் ஆய்வு
காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் குழித்துறையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய சுசீந்திரத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செல்லவிருந்தார்.
மீனவர்கள் உடன் சந்திப்பு
ஆனால் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் அறிவுரையை ஏற்று தனது பயணத்தை குளச்சலுக்கு ஆளுநர் மாற்றினார். அப்போது ஒரு திருமண மண்டபத்தில் மீனவர்களை ஆளுநர் சந்தித்தார்.
மீனவர்கள் வாக்குவாதம்
எனினும் மீனவர்களை காக்க மத்திய- மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன என கேட்டு மீனவ மக்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலில் சென்ற மீனவர்களை காப்பாற்றாமல் கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி ஆளுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இந்த புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் டேவிட்டின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும் ஆளுநருக்கு எதிர்ப்பு வலுத்ததால் தனது குளச்சல் பயணத்தை ரத்து செய்துவிட்டு குமரிக்கு திரும்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.