மீனவர் பிரச்சினை: ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் அமளி... ஒத்திவைப்பு
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தினசரி தாக்கப்படுவதைக் கண்டித்து ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 16ம் தேதி தொடங்கியது. செல்லாத ரூபாய் நோட்டுக்கள் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனலை கிளப்பி வருகிறது. முதல் நாளன்று ராஜ்யசபாவில் செல்லாத ரூபாய் நோட்டுக்கள் பற்றிய விவாதம் நடைபெற்றது.
இரண்டாம் நாளான நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், மீனவர் பிரச்சினையை பற்றியும் அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர். ராஜ்யசபாவில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று நாடாளுமன்றம் தொடங்கும் முன்னதாக டெல்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி.க்கள் சந்தித்து மனு அளித்தனர். எம்.பிக்கள் தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் மோடியை சந்தித்தனர். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்கள் வலியுறுத்தினர். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தினர். அதற்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார். பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை , முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் பிரதமரை சந்தித்து மனு அளித்ததாக கூறினார்.
மூன்றாவது நாளாக ராஜ்யசபா தொடங்கிய உடன் மீனவர் பிரச்சினையை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். நவநீதகிருஷ்ணன் எம்.பி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டார். அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்படவே ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது. அரை மணி நேரம் கழித்து அவை கூடிய உடன் மீண்டும் அமளி ஏற்பட்டது. அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கோடியக்கரை அருகே தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் மீது நேற்று இலங்கை கடற்படையினர் துப்பாக்கிக்சூடு நடத்தினர். இதனை கண்டித்து இலங்கை தூதரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.