தெலுங்கானா மசோதா தாக்கல்: மக்களவையில் கம்யூட்டரை உடைத்து மிளகுப்பொடி தூவிய எம்.பி
டெல்லி: சீமாந்திரா எம்பிக்களின் கடும் அமளிக்கிடையே மக்களவையில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மக்களவையில் இன்று உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவையில் இன்று தெலுங்கானா மசோதா தாக்கலானது. இந்நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் அமளியில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சீமந்திரா பகுதி எம்.பி. ராஜகோபால், அவையின் மையப்பகுதிக்குச் சென்று தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார். பின்னர் மேஜையில் இருந்த மைக்கை பிடுங்கி, அருகில் உள்ள மேஜையில் இருந்த கம்யூட்டரை தள்ளிவிட்டு உடைத்தார்.
அத்துடன் நிற்காமல் திடீரென தன் கையிலிருந்த மிளகுப்பொடி ஸ்பிரேவை அவையில் உள்ள உறுப்பினர்கள் மீது அடித்து தாக்குதல் நடத்தினார். இதிலிருந்து தப்பிக்க உறுப்பினர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் அவையில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.
மிளகுப்பொடி ஸ்பிரே தாக்குதலில் சில உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்ப்ரே தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடிய உறுப்பினர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மிளகுப்பொடி வீரியம் அதிகமானதால், மக்களவையில் இருந்த பத்திரிகையாளர்கள் இருமிக்கொண்டே இருந்தனர்.
தாக்குதல் நடத்திய ராஜகோபால், அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவராவார். எனினும் சீமாந்திரா எம்பிக்களின் கடும் அமளிக்கிடையே மக்களவையில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது.