கோவாவில் குடிபோதையில் தகராறு- 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது
பனாஜி: கோவா தலைநகர் பனாஜியில் குடிபோதையில் தகராறு செய்த 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் 5 பேர், கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு காரில் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு வடக்கு கோவாவில் உள்ள மோர்லம் பகுதியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள் காலி மதுபாட்டில்களை ரோட்டில் வீசிக்கொண்டே சென்றனர்.
இந்த பாட்டில்கள் தாக்கியதில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் கண்ணாடியும் உடைந்தது.
இதனால் ஏற்பட்ட தகராறில் அந்த கார் உரிமையாளரை, சி.ஆர்.பி.எப். வீரர்கள் தாக்கினர். உடனே அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவா போலீசார் அங்கு விரைந்து சென்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.