தலாக், தலாக்...: சுப்ரீம் கோர்ட்டில் 5 மத நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை ஆரம்பம்!
முத்தலாக் விவகாரத்து முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. இதை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கிறது.
டெல்லி: முத்தலாக் விவகாரத்து முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. இந்த வழக்கை 5 மதங்களைச் சேர்ந்த நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இஸ்லாமியர்கள் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் அமைப்பினர் நாடு முழுவதும் போராடி வருகின்றனர்.
முஸ்லிம் தனிநபர் வாரியம்
இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. ஆனால் முத்தலாக் முறை சரியானதே என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டு வருகிறது.
5 நீதிபதிகள் அரசியல் சாசன பெஞ்ச்
இந்த வழக்குகள் விசாரணைக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த பெஞ்ச் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணையை தொடங்கியது.
5 மதங்களின் நீதிபதிகள்
நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் இந்த வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகளும் 5 மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை விசாரிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர், சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். சீக்கியர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகி இருப்பது இதுதான் முதல் முறையும் கூட.
யார் யார்?
இந்த பெஞ்ச்சில் இடம்பெற்றுள்ள குரியன் ஜோசப் கிறிஸ்தவர்; நீதிபதி உதய் உமேஷ் லலித், இந்து மதத்தைச் சேர்ந்தவர்; நீதிபதி பாலி நாரிமன், பார்ஸி மதத்தைச் சேர்ந்தவர். நீதிபதி அப்துல் நஸீர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். இன்றைய விசாரணையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், முஸ்லிம்களின் பலதார திருமண முறை பற்றி ஆராயவில்லை. முத்தலாக் விவகாரத்து முறை சட்டப்பூர்வமானதா? என்பது குறித்தே விசாரிக்கிறோம் என்றார்.