மோடி அமைச்சரவையை அலங்கரிக்கும் முன்னாள் முதல்வர்கள்
டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான 46 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில் 5 முன்னாள் முதல்வர்கள், ஒரு முன்னாள் துணை முதல்வர் ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி தலைமையிலான 46 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
வயது மூத்த நஜ்மா ஹெப்துல்லா
மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில், நஜ்மா ஹெப்துல்லா மட்டுமே முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர்தான் அதிக வயது கொண்ட அமைச்சர் இவரது வயது 74.
இளம் வயது ஸ்மிருதி இரானி
மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் வயது குறைந்தவர், ஸ்மிருதி இரானி (38) ஆவார்.
5 முன்னாள் முதல்வர்கள்
மோடி அமைச்சரவையில், முன்னாள் முதல்வர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். நரேந்திர மோடி (குஜராத்), ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்), சுஷ்மா ஸ்வராஜ் (டெல்லி), உமா பாரதி (மத்தியப் பிரதேசம்), சதானந்த கௌடா (கர்நாடகம்).
துணைமுதல்வர் கோபிநாத் முண்டே
இது தவிர மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டேயும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
வாரிசுகளுக்கு நோ சான்ஸ்
மோடி அமைச்சரவையில், பாஜக மூத்த தலைவர்களின் வாரிசுகள் யாருக்கும் இடமளிக்கப்படவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த், சத்தீஷ்கர் முதல்வர் ரமண் சிங்கின் மகன் அபிஷேக், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வருண்காந்திக்கு இடமில்லை
மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ்பீர் சிங், ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமலின் மகன் அனுராக் தாக்குர் உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
கூட்டணியில் வாரிசு
பாஜக மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு இடமில்லை. ஆனால் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பாதலின் மருமகள் ஹர்சிம்ரத் கவுர் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.